title


2 ஜீன் - ராஜா சார்

அன்பின் ராஜா சார்,
உடலின் ரத்தமெல்லாம் கண்ணீராய் வெளியேறுமளவு துக்கத்தை உங்கள் இசையால் கடந்திருக்கிறேன். தூக்கம் தொலைத்த இரவுகளின் வெறுமையை உங்கள் பாடல்களால் நிரப்பினீர்கள். உடன்வர யாருமற்ற தனிமையின் துக்கத்தை உங்கள் படைப்புகள் போக்கியிருக்கின்றன. காதலோ, அன்போ, பக்தியோ, நட்போ உங்கள் இசையின் எல்லைக்குள் அடங்காத ஏதுமில்லை. காரிலோ, பைக்கிலே, பேருந்திலோ அல்லது நடந்தோ, உங்கள் பாடல்கள் இல்லாத பயணங்களும், ஏதேனும் ஒருமுறையாவது உங்கள் இசை தீண்டாத நாட்களும் என் வாழ்வில் வெகு சொற்பம்.
*
புதிய பாடல்கள் வெளியாகும்போதும் அல்லது மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் மனதை கவரும் போதெல்லாம், அந்தப்பாடல்களையும் ரசிப்பதுண்டு; ஆனால் அவை எதுவும் உங்கள் இசையில் உணரும் நெருக்கத்தை தந்ததில்லை. இதோ சமீபத்தில், நண்பன் ஒருவனுக்காய் கேட்கத் துவங்கி, பின்னர் கிட்டத்தட்ட உங்கள் பாடல்களுக்கு இணையாக திரு. A.R.ரஹ்மான் அவர்களின் பாடல்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்றாலும் எனக்கான நிறைவு உங்கள் இசையில்தான் இருக்கிறது.
.
நம் எல்லோருக்கும், எப்போதும் எவரிடத்தும் பகிர்ந்துகொள்ளமுடியாத துக்கங்கள் இருக்கும். நம்மால் செரிக்கவே முடியாதவை அவை. ஒருபோதும் தவிர்க்கவோ, இறக்கி வைக்கவோ முடியாமல் கிட்டத்தட்ட உடலின் ஒரு அங்கமாகவே மாறிப்போன சில துக்கங்கள். எனக்கான துக்கத்தை, அதை சுமப்பதின் வலியை கொஞ்சமாவது மறக்கச்செய்யும் மாமருந்து உங்கள் இசை. மருத்துவன் நீர்.
*
நாம் மகிழ்ந்திருக்கும் தருணங்களில் நம்முடன் இருக்கலாம் ஆயிரம் உறவுகள்; நம் வெற்றியை கொண்டாடலாம் பல நண்பர்கள்; மற்றவர்களின் பாடல்கள் எனக்கு அப்படித்தான். ஆனால், பிறர் யாரும் அறியாமல், உயிர் உருக்கும் பெருவலியால் அழ நேர்கையில் நாம் தேடுவது, ஆறுதலான ஒரு அண்மையை, தலை சாய ஒரு மடியை, தழுவி அழும் தோள்களை. உங்கள் இசை எனக்கு அப்படியானது. நான் முன்பொருமுறை எழுதியது போல, மகிழ்ந்திருக்கையில் பாராட்டவும் தழுவவும் கைகுலுக்கவும் நீளும் கரங்களை விடவும்; துக்கத்தில் வழிந்தோடும் விழிநீர் துடைக்கும் கரங்கள் மிகவும் நெருக்கமானவை. அது கை கொடுக்கும் கை. எனக்கு அந்தக் கை இளையராஜாவின் கை.
*
(ராஜா சார் பிறந்தநாளை (2June) முன்னிட்டு எழுத நினைத்த பதிவு இது; வேலைப்பளுவால் IST பிறந்தநாள் தாண்டிவிட்டபடியால், பெரிய மனசு பண்ணி, எல்லாரும் EST Timezoneல் இருப்பதாய் எண்ணி இதைப்படிக்கும்படி வெகு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)
:)

No comments: