title


நான்கு கவிதைகள்

பெருவலி


வலக்கையிலிருந்து இடக்கைக்கு
இடமிருந்து வலமாக
தென்றலில் பூப்போல
புயல் கண்ட மரமாக
பெரும் யோசனைக்குப்பின்
மாற்றி மாற்றி உருட்டினாலும்
பகடைக்குத் தக்கவாறு
தன்னை மாற்றி வழிமறிக்கும்
சர்ப்பங்கள்
நெருப்புடன் வாழ்வதே விதி
குதித்தாலும் ஆவியாகும்
பெருநதியும்


அரிதாரம்

1
மனதின் ஆழ்வெளியில்
நிரம்பவும்
கள்ளத்தனம் -
நாசூக்கால் மூடப்பட்டு
மூடியை எளிதாகக்
கழற்றுகிறது
தனிமை….

2
எப்போதும் யாராவது
உடனிருக்க
வேஷமிட்டு வேஷமிட்டே
வெறுத்தான் கோட்ஷே

இருப்பது சுலபம்
நடிப்பது கடினம்
காந்தியாக !

ICU தளம்

மிக நீண்ட வாராந்தாவில்
சோகத்தை
திப்பி திப்பியாய்
குமித்து வைத்தான்
கண்ணீர்க்கடலில்
கண்களையல்ல…..
முகத்தையே மூழ்கடித்தான்
கடந்து வந்த தவறுகள்
கணிக்க மறந்த நிகழ்வுகள்
வருந்தி அழ
வாய்ப்பளித்தான்
பல வருட சண்டைகள்
பார்க்க விடாத கோபங்கள்
கண்ணீரில் கரைய வைத்தான்
பழமொழிகள் தத்துவங்கள்
பகிர்ந்து உணரப்
பார்த்திருந்தான்
ஆனந்தமோ….
ஆசுவாசமோ….
அறிவிப்புகள் ஒலிக்கவைத்தான்

அனைத்தையும் மறக்கடிக்க
சிறு குழந்தையாய்
தானே வந்தான் !

No comments: