title


என் பெயர் ராமசேஷன்


நம்மில் பெரும்பாலோனோர்க்கு இந்த அவஸ்த்தை இருக்கும். வேரொன்றுமில்லை, பிறர் நம்மீது கொண்டிருக்கும் எண்ணங்களை காக்க வேண்டி, அவர்கள் நம்மைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் விசயங்கள் யாவையும் உண்மை என்பதை நிருபிக்க வேண்டி நாம் வேஷம் போடுவது. நாய் வேஷம் போடும் போது குரைக்கவும், குரங்கு வேஷம் போடும் போது குட்டிக்கரணம் அடிப்பதும் நமக்கொன்றும் பெரிய பிரச்சினை இல்லை. சிறு வயது முதலே நாம் அதற்கென மிகத்திறமையாக வளர்க்கப்பட்டதால் வேஷமிடுவது குறித்த வெட்கமுமில்லை. ஒருவேளை எப்போதாவது மனசாட்சி உறுமினால் இருக்கவே இருக்கிறது – “Survival of the Fittest”, ஊரோடு ஒத்துவாழ்வதற்கான உபதேசங்கள். அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாங்கி நெடுநாட்கள் ஆகியிருந்த போதும் மிக சமீபத்தில்தான் ஆதவன் அவர்கள் எழுதிய “என் பெயர் ராமசேஷன்” நாவலை படிக்க நேர்ந்தது. நாவலை கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ராமசேஷனின் இளமைகாலங்களின் பதிவு என சுருக்கமாக சொல்லலாம். ஆனால், இந்த நாவலின் ஊடாக ஆதவன் சொல்லியிருக்கும் வாழ்க்கை ராமசேஷனுடையது மட்டுமல்ல. மாறாக பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை. வழியாக வாழ்க்கை எனும் பரமபதத்தில் பிறர்கையில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பகடைக்காய்களின் கதை.

அப்பா, அம்மா, அத்தை, பங்கஜம் மாமி, மாலா, ராவ், பிரேமா, கணக்கு வாத்தியார் என தன்னைச் சூழ்ந்துள்ளவர்கள் தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்து அதற்குகந்த செயல்பாடுகளால் நிரம்பியது ராமசேஷனின் கல்லூரிக்காலம். தனக்கு, தன் இயல்புக்கு ஒத்துவராதபோதும் தற்காலிக இன்பம் அல்லது பிறரது அன்புக்கு பாத்திரமாக வேண்டி, தன்னைப் பற்றிய பிறரின் கற்பனைகள் சுமந்து அலைகிறான் ராமசேஷன். ஒருகட்டத்தில் வேஷம் அலுத்துப்போய் / அண்மை சலித்துப்போய் வேஷத்தை கலைக்க முற்படும்போதெல்லாம் அவனைப்பற்றிய அவதூறுகள் மட்டுமே எஞ்சுகின்றன. ஒரு கணமும் அல்சேஷனாகவும் சலிப்புற்று ஆதிசேஷனாகவும் என மாறி மாறி வேடிக்கைகாட்டும் ராமசேஷன், வெறுமனே “ராமசேஷனாக” இருப்பது வெகு சொற்பமான தருணங்களிலேயே.



இந்த நாவலின் முதற்பதிப்பு வெளிவந்தது 1980ல். நான் பிறக்கும் முன்பே. ஆனால் இந்த நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் / சம்பவங்கள் யாவையும் எனக்கு என் கல்லூரிக்காலத்தை அதில் நான் பார்த்த நண்பர்களை நினைவூட்டியது. சுற்றியிருக்கும் எல்லோருக்குமான ஒரு வாழ்வை / அடையாளத்தை நாம் வைத்துக்கொண்டு நம்முடையதை நாம் எப்போதும் தொலைத்துக்கொண்டேயிருக்கிறோமோ ?

ஆதவனின் அற்புத மொழியில் சொல்லப்பட்டிருக்கும் ராமஷேசனின் கதை நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம்.

No comments: