”ஏங்க பொங்கலுக்கு வரதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா ?”
தொலைபேசியில் கேட்டாள் என் மனைவி.
“இல்லம்மா, இந்த வாரம் முக்கியமான டெஸ்டிங் வேலை இருக்கும் போல தெரியுது. அதனால வரது ரெண்டு அர்த்தம்தான்”
“என்னங்க இப்படி சொல்லுறீங்க.... நோம்பி (விழா நாள் என்பதற்கான கொங்கு பாஷை) நாளாதுவுமா சென்னைல தனியா நீங்க என்ன பண்ணப்போறீங்க ?”
“அப்படியில்லமா, வேலை இருந்ததுன்னா நாம என்ன செய்யுறது சொல்லு ? அதுமட்டுமில்லாம புத்தக கண்காட்சிக்கு போலாம்னு ஒரு ஐடியா...” என்று லேசாக பிட்டைப் போட்டேன்.
“அதான பாத்தேன், ஏற்கனவே வாங்கின புத்தகத்த மொதல்ல படிச்சு முடிங்க, அப்புறம் வாங்கலாம்.” எதிர்பார்த்த பதிலாகையால் மேற்கொண்டு பயமில்லை. திட்டமிட்ட வசனங்களே போதும்.
”அருணா, உங்கிட்ட நான் பலமுறை சொல்லியிருக்கேன், நான் படிக்க ஆசைப்பட்ட, நேரமிருந்த போதெல்லாம் வாங்க காசிருந்ததில்லை. அதனால இப்ப வாங்க காசிருக்கு வாங்கி வைப்போம். என்ன சொல்லுற ?”
சில நிமிடங்களுக்கு மெளனம்...
“ஹலோ.. ஹலோ...”
“சொல்லுங்க...”
“என்ன ஆச்சு ? பேச்சையே காணோம்? “
“இல்லீங்க, தண்ணிகுடிக்க போயிருந்தேன், அதான் போன இங்கயே வச்சுட்டு போய்ட்டேன். என்ன சொன்னீங்க?”
என்ன ஒரு வில்லத்தனம்....பேசும்போது கேட்காமல் கேட்கும்போது பேசணுமான்னு எனக்கு ஏக கடுப்பு. இருந்தாலும் இப்ப வீரம் முக்கியமில்லை விவேகம்தான் முக்கியமாதலால். மீண்டும் துவங்கினேன்.
”அருணா, உங்கிட்ட நான் பலமுறை சொல்லியிருக்கேன், நான் படிக்க ஆசைப்பட்ட.....”
“ஏங்க இருங்க. தெரியும் தெரியும்... பழைய வசனம்தானே”
“ஆமா. ஆமா “ (பின்ன இதுக்காக தனியா வசனகர்த்தாவா வைச்சுக்க முடியும்..)
“சரி முடிவு பண்ணீட்டீங்க.... உங்க இஸ்டம் ”
“இல்லமா புத்தக கண்காட்சின்னு இல்ல. நெசமாலுமே வேலை இருக்கு”
“சொன்னா கேட்க மாட்டீங்க. ஆனா அப்பாகிட்டயும், மாமாகிட்டயும் ஒரு பேச்சு சொல்லிடுங்க”
என்னடா இது... இவ்வளவு சுலபமா வேலை முடிஞ்சிருச்சேன்னு ஒருபக்கம் சந்தோஷம். ஆனா இனி அப்பாகிட்டயும் மாமனார்கிட்டயும் பேசணுமேன்னு ஒரு தயக்கம் வேறு. என்ற போதிலும் இந்த புத்தகக் கண்காட்சி துவங்கிய நாள்தொட்டு பெரும்பாலும் நான் படிக்கும் தளங்களில் எல்லாம் வெளியாகியிருந்த புத்தக காட்சிப் பதிவுகள் ஏகத்துக்கு என்னை உசுப்பேற்றியிருந்ததன. அதிலும் பா. ராகவன் மற்றும் தமிழ்பேப்பரில் தினமும் போடும் பதிவுகள் புத்தக கண்காட்சிக்கு சென்றே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை உண்டாக்கின. பத்தும் பத்தாததற்க்கு நம்ம எஸ்.ராமகிருஷ்ணனும் அவருடைய சிபாரிசுகளைச் சொல்லியிருந்தார்.
எனவே ஒருவழியாக அப்பாவிடமும், மாமாவிடமும் பேசி அவர்களிடம் சம்மதம் வாங்கியாகிவிட்டது (பேசியது புத்தக கண்காட்சியைப் பற்றியல்ல அலுவலக வேலையைப் பற்றி). முடித்தபின் மீண்டும் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.
எனக்கு சம்பந்தமேயில்லாமல் “முடிவில் ஒரு திருப்பம்” என்ற புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு தொலைபேசியை எடுத்தேன்.
“சொல்லும்மா, இப்பதான் அப்பாகிட்டயும் மாமாகிட்டயும் பேசினேன். ஒண்ணும் பிரச்சனை இல்ல”
“ஏங்க நெசமா சொல்லுங்க... புத்தக கண்காட்சி மட்டும்தானா ? வேற ப்ளான் ஒண்ணுமில்லைல”
“சே என்ன இப்படி ஒரு கேள்வி. பசங்க எல்லாருமே ஊருக்கு வந்திருப்பாங்க தெரியுமில்ல”
“தெரியும். இருந்தாலும்... அடுத்த வாரம் போய்க்கோங்களேன்.... பொங்கலுக்கு இங்க வாங்க”
“என்னப்பா இது... வேலை இருக்கறதாலதான நான் வரமாட்டேங்கிறேன்...”
ஒருவழியாக இப்படியான பல கட்ட விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளைத் தாண்டி புத்தக கண்காட்சிக்கு செல்வது உறுதிப்படுத்தப்பட்டது.
பின் வந்த ஓரிரு நாட்களும் முக்கியமான அரங்களையும் புத்தகங்களையும் குறித்து வைப்பதில் கழிந்தது. ஜனவரி 13 வியாழன் வரை பல்வேறு தளங்களில் புத்தக கண்காட்சி குறித்த தகவல்களை திரட்டிக்கொண்டேயிருந்தேன். ஜனவரி 14 வெள்ளி காலை செல்வதாக திட்டம்.
No comments:
Post a Comment