title


34 ஆவது சென்னை புத்தக காட்சி – சனி (ஜனவரி 15)

”சொன்னா கேளுப்பா, நேத்துதான் புத்தகக் கண்காட்சிக்கு போனேன் போதுமான அளவு புத்தகமும் வாங்கியாச்சு, இப்ப மறுபடியுமா? “

இன்று புத்தகக் காட்சிக்கு அழைத்த என நண்பரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். (ஆனால் மனம் முழுக்க எத்தனை மணிக்கு கிளம்பினால் நிறைய நேரம் புத்தகங்களைத் தேடலாம் என கணக்கிடத்துவங்கிவிட்டது. என்னதான் வெட்டிப்பயல்னாலும் கேட்டவுடனே சரின்னு சொன்னா நம்ம கெளரதை என்ன ஆகறது ?)

விசயம் இதுதான்....

பொங்கல் சமயமாகையால் அவர் ஊரிலில்லை என நான் எண்ணிக்கொண்டு தனியாக முந்தைய தினமே புத்தகக் காட்சிக்கு சென்று வந்துவிட்டேன். என்னை போலவே அவருக்கும் அலுவலகத்தில் வேலையாம் (?) அதனால் அவரும் போகவில்லை. புத்தகக் காட்சிக்கு போலாமென்று எண்ணி என்னைக் கடுப்பேத்த தொலைபேசியில் அலைத்தார். ஆனால் நான் சென்னையில் இருந்ததும் நேற்றே புத்தகங்கள் வாங்கியதும் தெரிந்து ஆவேசப்பட்டார்.

”நீ தான் அரை நாள் லீவுவிட்டாலே அவினாசிக்கு பஸ் பிடிக்கறவனச்சே... பொங்கல் நாளதுவுமா இங்க என்ன பண்ணுற ? குறைந்தபட்சம் நேத்து போறதுக்கு முன்னாடி என்ன ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் (இப்ப அவுரு போறதுக்கு முன்னாடி என்னை கேட்டுட்டாராமா...). இப்ப மட்டுமென்ன கிளம்பி வா ... “

சரி ரொம்ப பிகு பண்ணினா “வந்தா வா.. இல்ல வராட்டி போ...” என கழட்டிவிடும் அபாயம் உள்ளதால்.... “சரி சரி.. உங்களுக்காக வரேன்...” என பெருந்தன்மையாக சொல்லிவைத்தேன். அடுத்த 30 நிமிடங்களில் அரக்கப் பறக்க கிளம்பி புத்தகக் கண்காட்சியை அடைந்தபோது மணி 3 இருக்கும். நேற்றைவிட இன்று மிக அதிகமான கூட்ட்மிருக்குமென்பது எனக்கு அங்கேயே தெரிந்துவிட்டது (பெரிய கின்னஸ் கண்டுபிடிப்பு நிறைய வண்டிகளிருந்தால் நிறைய கூட்டமிருக்குமென்பதை சின்னக் குழந்தைகூட சரியா சொல்லிடும்).

நான் வண்டியை நிறுத்திவிட்டு அதற்குறிய ரசீதை வாங்கிக்கொண்டிருக்கும்போது என் அலுவலக நண்பர் கணேஷ் செல்போனில் அழைத்தார். அவரும் அவருடைய நண்பர் மகேஷும் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருப்பதாகவும் சில புத்தகங்கள் பரிந்துரைக்கும்படியும் கேட்டார். பேசிக்கொண்டேயிருக்கும்போதுதான் கவனித்தேன் அவர் எனக்கு அருகில்தான் நின்றிருந்தார். ஆகவே செல்போனை அணைத்துவிட்டு அவர்களுடன் இணைந்து கொண்டேன்.

நான் சென்றமுறை வந்தபோது என்னிடம் முக்கியமான பதிப்பகங்கள் மற்றும் புத்தகங்கள் என ஒரு பட்டியல் இருந்தது. (நான் எப்போது புத்தகம் வாங்க சென்றாலும் அத்தகைய ஒரு பட்டியலுடன் செல்லக் காரணம் ”முழுசா மூணு புக் பெயர கூட ஞாபகம் வச்சுக்க முடியாதென்ற” தங்கமலை ரகசியம்தான்). ஆனால் இம்முறை ஒரு மாறுதலுக்காக நான் எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி வந்திருந்தேன்

நேற்றைப் போலவே இன்றும் தினத்தந்தியிலிருந்து கணக்கைத்துவக்கினேன். இம்முறை வரலாற்றுச்சுவடுகள் வாங்கியது நண்பருக்காக. அடுத்து ஓரிரு பதிப்பகங்களுக்குச் சென்றுவிட்டு கணேஷிடமும் வஸந்திடமும் இல்ல இல்ல கணேஷிடமும் மகேஷிடமும் (வேற ஒண்ணுமில்லீங்க சுஜாதா பாதிப்பு) விடைபெற்றுக் கொண்டு என் நண்பரை செல்போனில் அழைத்தேன்.

வந்த நண்பரின் முதல் பார்வையிலேயே “என்னடா வரல வரலன்னு பிகு பண்ணிட்டு இப்ப இவ்வளவு பரபரப்பா வந்திருக்கானேன்னு” கேள்வி தெரிந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் சேர்ந்து மீண்டும் முதலிலிருந்து துவங்கினோம். என்னுடைய முந்தைய நாள் அனுபவத்திற்கும் இன்றைக்கும் முக்கியமான சில வேறுபாடுகளுண்டு

1. நேற்றைப் போலல்லாமல் இன்று இலக்கில்லாமல் சுற்றியது (கூட பேச்சுத்துணைக்கு நண்பனும்).
2. கண்காட்சியில் கூட்டம் நிரம்பியிருந்தது
3. மிக மிக முக்கியமானதொரு விசயம், நல்ல நல்ல இலக்கியவாதிகளை நேரில் பார்க்க நேரிட்டது (அந்த அனுபவம் பின்னொரு பதிவில்)

இம்முறை நானே எதிர்பார்க்காமல் நல்ல நல்ல புத்தகங்கள் வாங்கினேன். (“ஏங்க நேத்தே நீங்க புக்கெல்லாம் வாங்கியாச்சு இன்னிக்கு போறது சும்மா உங்க நண்பருக்காக... மறந்துடாதீங்க” என்ற என் மனைவியின் எச்சரிக்கையையும் மீறி). நான் இம்முறை வாங்கிய புத்தகங்கள் அடுத்த பதிவில்.

பொதுவாக என்னுடைய இந்த இரு நாள் புத்தகக் காட்சியின் வாயிலாக நான் உணர்ந்துகொண்ட ஒரு முக்கியமான உண்மை புத்தகக் காட்சி என்பது வெறுமனே புத்தகங்கள் வாங்க மட்டுமல்ல, அதுவொரு கொண்டாட்டம். தினந்தொரும் கடவுளைக் கும்பிட்டாலும் திருவிழாவன்று கும்பிடுவது எப்படி தனி சிறப்போ அதைப் போலவேதான் புத்தகப்பிரியர்களுக்கு புத்தகக் காட்சியும். ஆகவே இனி ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சிக்கு செல்ல எண்ணம், பார்ப்போம்.

No comments: