title


34 ஆவது சென்னை புத்தக காட்சி – புத்தகப்பட்டியல் (ஜனவரி 15)

சென்ற ஜனவரி 15 சனிக்கிழமையன்று நான் சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே.

இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் எல்லா புத்தகங்களையும் இப்போதுதான் வாங்கியுள்ளேன், இன்னும் படிக்கவில்லை. எனவே புத்தகம் பற்றிய குறிப்புகள் ஏற்கனவே நான் பல்வேறு தளங்கள் வாயிலாக அறிந்தவை மட்டுமே.

1. நத்தை போன பாதையில் (ஹைக்கூ கவிதைகள்) - தமிழில் மிஷ்கின் (வம்சி)
பிற மொழிகளிலிருந்து சிறந்த ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் மிஷ்கின். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மூன்று மழை நாட்களில் ஒரு விளையாட்டைப்போல் மொழிபெயர்க்கப்பட்டவையாம்.


2. பட்டினி வயிறும் டப்பா உணவும் – தமிழில் போப்பு (பூவுலகின் நண்பர்கள் - வம்சி)

”WORLD WATCH PAPER 150” என்ற உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நூலின் தமிழாக்கம். தனி மனிதனின் நலம் மட்டுமின்றி சமூகத்தின் நலமும் அலசப்பட்டுள்ள நூல்.

3. சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் (தமிழினி)
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு. நாஞ்சில் நாடனுக்கே உண்டான எள்ளலும் எதார்த்தமும் கலந்த சிறுகதைகளின் தொகுப்பு நூல். இவ்வருட புத்தக்காட்சியின் “பெஸ்ட் செல்லர்” என்பதும் விற்பனையில் புது வரலாறு படைத்த நூல் என்பதும் கூடுதல் செய்திகள்.

4. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை – பவா செல்லத்துரை (வம்சி)
திரு. பவா செல்லத்துரை அவர்களின் பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு. ஒரு கதை கூட சோடைபோகவில்லை என திரு. பிரபஞ்சன் அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

5. நண்பர்களோடு நான் – கி.ராஜநாராயணன் (அன்னம்)
தன் நண்பர்களுடனான அனுபவங்களை கட்டுரைகளாகத் தொகுத்துள்ளார் கி.ரா. ஜெயக்காந்தன் துவங்கி சுந்தர ராமசாமி, மீரா, கு.அழகிரிசாமி என கி.ரா-வின் மனம் கவர்ந்த பத்து நண்பர்களைப் பற்றிய அனுபவப் பகிர்வு நூல்.

6. பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள் (பாரதி புத்தகாலயம்)
புதுவையில் பாரதியார் இருந்த போது அவருக்கு உற்ற துணையாயிருந்த மண்டபம் ஸ்ரீ சீனிவாச்சாரியாரின் மகள் யதுகிரி அம்மாள் பாரதியாரைப் பற்றிய தன் நினைவுகளை எழுதியுள்ள நூல்.

7. வரலாற்றுச் சுவடுகள் – தொகுப்பு தினத்தந்தி
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட செய்திகளின் தொகுப்பு. உலகம், இந்தியா, தமிழ்நாடு என எல்லா பிரிவுகளிலும் முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

8. கந்தர்வன் கதைகள் – தொகுப்பு பவா செல்லத்துரை (வம்சி)
தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுல் ஒருவரான திரு. கந்தர்வன் அவர்களுடைய 61 கதைகளின் தொகுப்பு. தன் 59 ஆவது வயதில் மறைந்த திரு. கந்தர்வன் அவர்களது இறுதி உரையாடலும் இடம் பெற்றுள்ளது.

9. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் – தமிழில் கி.இலக்குவன் (பாரதி புத்தகாலயம்)
இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய மிகச்சிறந்த நூல். அன்னியர் பிடியில் சிக்குவதற்கு முன்பிருந்த இந்தியா துவங்கி இந்திய விடுதலைப் போரின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் மிகக் கவனமாக ஆராயும் நூலின் தமிழாக்கம்

முன்னரே சொன்னதுதான் என்றாலும் மீண்டும் ஒருமுறை.....

எல்லா நூல்களின் விலையையும் பதிவிட ஆசைதான் என்றாலும் வருமான வரித்துறையை சமாளிக்க விலையைக் குறிப்பிடவில்லை (என்று சொன்னாலும் உண்மையான காரணம் உள்நாட்டுப் போரை தவிர்ப்பதே என்பதை மணமானவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்).

(ஜனவரி 14 வெள்ளிக்கிழமை வாங்கிய புத்தகங்கள் பழைய பதிவில்)

No comments: