title


34 ஆவது சென்னை புத்தகக் காட்சி – முன்கதை சுருக்கம்

நான் சென்னை வந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவரை ஒருமுறை கூட நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றதில்லை. புத்தகங்கள் படிப்பதில் எனக்கு ஆர்வமிருந்த போதிலும் சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்லாமலிருந்ததற்கு சில காரணங்களிருக்கின்றன.

பொதுவாக புத்தக கண்காட்சி நடைபெறும் வார நாட்களில் அலுவலக பணிகளால் போக இயன்றதேயில்லை. அதுமட்டுமின்றி, புத்தக கண்காட்சி நடைபெறும் பொங்கல் பண்டிகை (தைப்பொங்கல் மட்டுமல்ல என் சொந்த ஊர் அம்மன் பொங்கலும்தான்) சமயங்களில் வார விடுமுறைகளில் அவசியம் நான் ஊருக்கு செல்லவேண்டியிருக்கும் (இல்லாட்டி மட்டுமென்ன.... எல்லா சனி, ஞாயிறும் ஊருக்கு போறவந்தான, இதில பொங்கல் கெடா வெட்டுன்னு சாக்கு வேற). நான் வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் பண்டிகைதினங்களில் என்னுடைய இருப்பு பெற்றோர்களுக்கு அவசியமாகின்றது (என்று என்னால் நம்பப்படுகின்றது, அவங்களைக் கேட்டாதான் உண்மை தெரியும்).

இதைத்தவிர இன்னுமொரு முக்கியமான காரணமுண்டு. பொதுவாக மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ நான் தொடர்ந்து புத்தகங்கள் வாங்கும் இயல்பினன். அனைத்தையும் உடனடியாக படித்து முடிக்க முடியாவிட்டாலும், பணமிருக்கும் போது வாங்கிக் கொண்டு, நேரம் கிடைக்கும்போது வாசிப்போம் என்ற எண்ணம்தான் காரணம். அதனால் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்க வேண்டுமென்று தோன்றவில்லை.

என்றபோதிலும் ஈரோடு, கோவை என இரண்டுமுறை எதேச்சையாக புத்தக கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்பு நேர்ந்தது. அப்போதெல்லாம் சென்னை புத்தக கண்காட்சிக்கும் செல்ல வேண்டுமென்ற ஆவல் மனதில் எழும். காரணம் என்னவென்றால் மற்ற ஊர்களில் நடக்கும் புத்தக கண்காட்சியை விடவும் சென்னை புத்தக கண்காட்சி அதிக அரங்குகள் கொண்டது என்பது மட்டுமல்ல.

நான் என் வாழ்வின் ஒரு கட்டத்தை சென்னையில் கழித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் புத்தக கண்காட்சிக்கு ஒருமுறைகூட சென்றதில்லை என்பதை பெரும் குறையாகவே உணர்ந்திருக்கின்றேன். என்னுடைய அந்தப் பெரும் குறை இந்த வருடம் தீர்ந்தது.

34 ஆவது சென்னை புத்தக காட்சி 2011 க்கு இவ்வருடம் செல்ல நேர்ந்தது. அதன் அனுபவங்களை பதிவிட எண்ணியிருக்கின்றேன்.

No comments: