title


நகுமோ லேய் பயலே

2007ல் துவங்கி ஒரு நான்கு வருடங்கள் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் நான்கு வாரங்களாவது சொந்த ஊருக்கு பஸ் ஏறிடுவேன். பஸ் என்றால் முன்பதிவு செய்து பின் சாயும் வசதியுள்ள பஸ்களல்ல. பயண நேரம் முன்பின் ஆனாலும் கிடைத்த பேருந்தில் ஏறிக்கொள்ளும் வசதி படைத்த சாதாரண கட்டண அரசுப்பேருந்துகள். வெள்ளி இரவில் சென்னை To சேலமும், திரும்ப ஞாயிறு இரவில் சேலம் To சென்னையும் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத ஒரு கண்டக்டர் போலத் திரிந்தேன். அப்படிப்பட்ட ஒரு ஞாயிறு இரவு அது. வழக்கம்போல அடித்துப்பிடித்து ஜன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்தால், இருவர் மட்டுமே அமரும் அந்த இருக்கையில் நமக்கருகே வாய்த்தது நடுத்தரவயதுடைய ஒரு ஜென்டில்மேன். பஸ் கிளம்பும்வரை ஒரு பிரச்சனையுமில்லை. பின்னர் சம்பிரதாயமான சொற்றொடர்களுடன் பேச்சைத் துவங்கினார். அப்போதுதான் ஒரு விசயம் எனக்குப் புரிந்தது. ஜென்டில்மேன் மட்டும் தனியாக வரவில்லை துணைக்கு பக்கத்தில் இருப்பவனும் உளறுமளவுக்கு சரக்கும், அறிந்தவன் ஓடுமளவுக்கு ஆங்கிலமும் கைக்கொண்டிருந்தார். என் பணியைப் பற்றி விசாரிக்கும்போதே புத்தியுள்ளவனாயிருந்தால் தூங்குவதுபோல் நடித்திருக்கவாவது வேண்டும். நமக்கு IT வேலை என்பது பெரும் மதிப்பை ஈட்டித்தந்த காலம் அது. சொன்னேன். அந்த ஜம்பம் அவரிடம் பலிக்கவில்லை. பில் கேட்ஸ்லில் துவங்கி அவருக்குத் தெரிந்த எலி மருந்து வியாபாரி வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிணியுடன் சம்மந்தப்பட்டவர்களின் பெருமையை அடுக்கலானார். அதுவும் பஸ்ஸில் இருப்பவர்கள் என்னை பரிதாபமாகப் பார்க்கும் வண்ணம் கணீர்க்குரலில். கடவுளின் கருணையினாலோ அல்லது கவர்மெண்டின் புண்ணியத்தாலோ அடுத்த அரைமணி நேரங்களில் தூங்கிப்போனார். அன்றைக்கு என்னை கிட்டத்தட்ட அழ வைத்துவிட்ட அச்சம்பவம் பின்னெப்போது நினைவில் வந்தாலும் சிரிக்கவைக்கும். எனக்கிணையாக அல்லது கொஞ்சம் என்னைவிட கொஞ்சம் சுமாரான ஆங்கில அறிஞரை நான் சந்தித்த முதலும் கடைசியுமான சந்தர்ப்பம் அது.
.
நீண்ட நாட்கள் கழிந்து அந்த இரவுப் பயணத்தின் நினைவுகள் என்னுள் எழக் காரணம் அதேபோன்ற ஒரு இரவின் பேருந்துப்பயணம் கூடவே குடிமகன்களின் சலம்பல் நினைவுகள். ”நகுமோ, லேய் பயலே” என கேட்டபடி என்னிடம் அச்சுவாரசிய சம்பவத்தை, தன் புத்தகம் வாயிலாக பகிர்ந்து கொண்டிருந்தவர் அண்ணன் செல்வேந்திரன்.
.
பால்யத்தில் கிரிக்கெட் விளையாடாத மக்களின் எண்ணிக்கையை ஒரு ஓவருக்குள் அடக்கிவிடலாம். அவ்விளையாட்டின் சுவாரசியத்துக்கு சற்றும் சளைத்ததல்ல மைதானத்தில் நிகழும் சம்பவங்கள். ஓரளவுக்காவது விளையாடுவான் என்பதைத் தவிர மற்றெல்லா காரணங்களும் துணை நிற்க, அணித்தலைமையேற்று துவக்க வீரராகவும் களம் காணும் நாயகர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார்கள்தானே. யார்க்கருக்கும் தூஸ்ராவுக்கும் புது விளக்கம் சொல்கிறது “தூஸ்ரா” கட்டுரை. இக்கட்டுரையை படிக்கும்போது நினைவில் வந்த இன்னொரு கட்டுரை திரு.சுஜாதா அவர்கள் எழுதியது (ஸ்ரீரங்கத்து தேவதைகள் - கிரிக்கெட்டும் பகடியும் கலந்தது அக்கட்டுரை).
.
பேருந்துப் பயணங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல ரயில் பயணங்கள். “ரயில் பயணங்களில்” என் தனித்தொகுப்பே போடுமளவுக்கு, ஆசான் திரு.ஜெயமோகன் துவங்கி திரு. நெல்லை கண்ணன் வரை “இடுக்கண் வருங்கால் நகுக்க” வைத்த அனுபவங்களை படித்திருக்கிறேன். ஆனாலும், இந்த “நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்” காட்டும் குத்தவைச்சாசனங்களும், கரண்டு பில் மிச்சம் பிடிக்கும் கண்ணியவான்களும் நம் சிரித்தே தீரவேண்டிய கதைகள்.
.
பள்ளியில் தமிழ் கற்றுத்தரும் சில ஆசிரியர்களின் தமிழ்ப்புலமை மீதல்ல, தமிழ் ஆர்வம் மீது கூட நாம் சந்தேகம் கொள்ளத்தேவையிருக்காது. ஐயந்திரிபற ஆசிரியர்கள் சரியாக தமிழ் என எழுதுவதற்கே குறைந்தபட்சம் மூன்றுமுறையாவது முயல வேண்டும். அத்தகைய ஒரு அறிவுச்சூழலில் ஆங்கில இதழ்களை சலுகை விலையில் விற்கச் சென்ற எழுத்தாளர் மீது காலம் கொஞ்சம் சலுகை காட்டியிருக்க வேண்டுமல்லவா (அறிவினில் உறைதல்).
.
திரு. நாஞ்சில் நாடனின் “கும்பமுனி” அவதாரம் எனக்கெல்லாம் ஒரு Stress Buster. இரவு 10 மணிக்கு, (வல்விருந்து தொகுப்பை படித்துக்கொண்டு) கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தவன், பஸ் என்பதை மறந்து கெக்கெ பிக்கே என நான் சிரித்து வைக்க பஸ்ஸில் இருந்த பத்து பேரும் தவசிப்பிள்ளையாக மாறி தலையிலடித்துக் கொண்ட சம்பவம் ஒன்று போதும் உதாரணத்துக்கு. அவ்வகையில் பி.மாசானமுத்து கும்பமுனிக்கு ஒன்றுவிட்ட அண்ணனோ தம்பியோ எனச்சொல்லலாம். புத்தகத்தில் மாசானமுத்து வரும் கட்டுரைகளில் (மோடி வரட்டும் சாடி, இலக்கிய மேற்கோள்கள், பொன்மொழிகள், கவிதைகள், ட்வீடுகள்) எல்லாம் “விசில்” சத்தம் காதைப் பிளக்காதது ஒன்றுதான் குறை.
.
இன்கிரிமெண்ட் பெற இனிய வழிகள், இலக்கிய வாசகனின் பாவனைகள், பத்தாயிரம் புத்தகங்கள் விற்பனையாக என கட்டளைகளைப் பட்டியலிடும் கட்டுரைகள், கொரோனா கவிதைகளுக்கு சவால் கொடுக்கும் பாடல்கள் (கேட்டிருக்கீர்களா?), “டானென்று” வீட்டுக்குப் போய்விட நேரும் டானின் கவிதை, இலக்கிய வாசகனின் பாவனைகள், மாசனமுத்துவின் ட்வீட்ஸ் பகுதியில் வரும் எஸ்ரா பவுண்ட் பெயர் ஆராய்ச்சி முடிவு, மொழிக்கொடை வரிசை (அய்யோக்கியன், இழகி) என எண்ணிச் சிரிக்கும் தருணங்கள் ஏராளம்.
.
பகடிக் கட்டுரைகள் எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கிறது. ஒன்று உண்மையிலேயே நகைக்க வைக்கும் அனுபவங்களை மிகச்சரியாக நாம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது நாம் எழுதியிருப்பது நகைச்சுவை இரு பத்திகளுக்கு ஒருமுறையாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கடும் சிரத்தையோடு அனைத்தையும் வாசித்துமுடித்த பின்னர் ஆமா எங்க அந்த பகடிக்கட்டுரை என ஒரு அப்பாவி வாசகன் கேட்டுவிட நேரிடும். ஆனால், இத்தடையை தனது “தூஸ்ரா” கலந்த “யார்க்கரால்” அற்புதமாக தகர்த்திருக்கிறார் திரு. செல்வேந்திரன்.

நகுமோ, லேய் பயலே - மின்னூல் வாங்க சுட்டி :
https://www.amazon.in/%E0%AE%A8%E0%AE%95%E0%A…/…/ref=sr_1_1…

#வாசிப்பு_2020
#பிடித்த_புத்தகங்கள்

3 comments:

kumarshanmugam said...

காளி.. பின்னிடீங்க...அழகான,சிறப்பான புத்தக அறிமுகம்...

Unknown said...

Nice writing about the book

Admin said...

tamil book download grouo :- https://www.facebook.com/groups/3414300415269642/?ref=share