title


வாசிப்பது எப்படி

”வாசிப்பதனால் ஆய பயனென்கொல் வரவன்
போறவனெல்லாம் கழுவியூற்றா விடில்”

என ஒரு புதுக்குறளே எழுதிவிடலாம். அந்த அளவுக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை ஏதோ வேற்றுகிரகவாசி போல ஒதுக்குவது அல்லது படிச்சவரைக்கும் போதும் ரகத்தில் அறிவுரை மழை பொழிவது என சங்கடத்துக்குள்ளாக்குவதில் நமக்கு நிகர் நாமே. உண்மையில் வாசிப்பு ஒருவனது வாழ்க்கையில் நிகழ்த்தும் அற்புதங்களை இந்தச் சமூகம் வெறுக்கிறது. வெறுமனே வாட்ஸப் பார்வேர்டுகளை நம்பிக்கொண்டு, கூடவே அனைத்தையும் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் லாபத்துக்கேற்ப பேசிக்கொண்டு வாழ்வதில் இருக்கும் சுகம் வாசிப்பவனால் தடைபடக்கூடும் என்பதும் அந்த வெறுப்புக்கு ஒரு முக்கியமான காரணம். ஏன் வாசிப்பு ஒரு சமூகத்துக்கு தேவைப்படுகிறது என்பதை மிக எளிமையாக அதே சமயம் அழுத்தமாக பதிவுசெய்யும் கட்டுரைகளுடன் துவங்குகிறது "எப்படி வாசிப்பது ?" எனும் நூல்.

வாசிப்பு என்பதை இலக்கிய வாசிப்பு என சுருக்கிக்கொள்ளாமல் பொதுவாகவே வாசிப்பதனால் வரும் நன்மைகளின் பட்டியல் மிகப்பெரியது. அன்றாடம், குறைந்தபட்சம் ஒரு நாளிதழாவது வாசிக்கும் பழக்கம் உள்ளவன் பதின்ம வயதில் துவங்கி பல் போகும் வயதுவரை செய்யும் செயல்களிலும் செல்லும் இடத்திலும் தனித்துவம் பெறுவான் என்னும் உண்மை மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.

வாசிக்க விரும்பும் ஒருவரின் ஆர்வத்தை குறைக்கக்கூடிய காரணிகளின் பட்டியலும் நீண்டதுதான். வாசிக்கும் ஆர்வத்தை நீர்த்துப் போகச் செய்யும் முக்கிய விசயங்களான சுவாரசியமில்லா எழுத்து நடையையும், அதே சமயம் வெகு சுவாரசியமாக எழுதப்படும் மேம்போக்கான கட்டுரைகளின் போதாமையையும், தொடர் வாசிப்பைத் தடை செய்யும்  டிவைஸ்களையும் நாம் கையாள வேண்டிய வித்தையை இந்நூல் நமக்குக் கற்றுத்தருகிறது. தொடர்ச்சியாக வாசித்தல், வாசிப்புக்கான மனநிலை, வாசிக்கும் நண்பர்கள், நமக்கான ஒரு வாசிப்புப் பழக்கம் / அட்டவணையின் தேவை, வாசிக்கும் போது குறிப்புகளின் தேவை, அதே போல் வாசித்த பின்னர் அப்புத்தகம் பற்றிய ஒரு சின்ன பகிர்தல் என ஒரு எளிய வாசகன் தன்னுடைய வாசிப்பை மேபடுத்திக்கொள்ளும் வழிமுறைகளை இப்புத்தகம் சுருக்கமாக அதேசமயம் தெளிவாகப் பேசுகிறது.

பொதுவாக வாசிப்பின் வரையறைக்குள் அதிகம் பேசப்படாதவை நாளிதழ்கள். ஒரு நல்ல நாளிதழுக்கான அடையாளங்களையும், அன்றாடம் நாளிதழ் வாசிக்கப்பட வேண்டிய அவசியத்தையும், நாளிதழ் வாசிப்புக்கு நம்மை பழக்கப்படுத்திக்கொள்வதற்கான எளிய வழிமுறைகளையும் இந்நூல் கவனப்படுத்துகிறது. புத்தகங்களை / இலக்கிய ஆக்கங்களைப் படிக்கும்போது அதன் வகைமை தெரிந்துகொண்டு படிப்பது அப்புத்தகத்திலிருந்து நாம் எதைக் கண்டடையலாம் எனும் தெளிவைத் தரும். கூடவே மதிப்பற்ற நூல்களை படித்து கால விரயம் செய்யாமல் வாசிக்கும் நண்பர்கள், விமர்சகர்கள் /ஆளுமைகளின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் தரலாம். நான் நாஞ்சில் நாடன் எனும் பேராளுமையை கண்டறிந்தது, அவரது ”இடலாக்குடி ராசா” எனும் கதையைப் பற்றிய திரு.பாலா அவர்களின் பதிவின் மூலமே (”இவன்தான் பாலா” -விகடன் பிரசுரம்).  எல்லாவற்றையும் கடந்து வாசிப்பு வெறுமனே ஒரு பொழுதுபோக்கோ அல்லது தூக்கம் தருவிக்கும் மருந்தோ இல்லை என்பதை நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு வாசகனுக்கு, இப்போது கொட்டிக்கிடக்கும் வாசிப்பு சார்ந்த வசதிகள் பெரும் வரம். நூலகங்கள், எழுத்தாளர்களின் தளங்கள், சிறுகதைகள் என பலவும் இணையத்தில் இலவசமாகவே கொட்டிக்கிடக்கும் காலம் இது. வாசிக்கும் ஆசைக்கு பணவசதி தடைபோடுவதை ஓரவுளுக்கு இல்லாமலே ஆக்கிவிடலாம். இந்த அனுகூலங்களை இந்நூல் பட்டியலிடுகிறது. ஏற்கனவே வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள், தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றிய ஒரு சின்ன உரையாடலின் மூலமே கூட சிலரையாவது வாசிப்பின் பக்கம் கரையேற்ற இயலும்.

இந்தப் புத்தகம் மிக அழுத்தமான விசயங்களைப் பற்றி பேசினாலும் எழுத்து நடை மிகவும் அற்புதம். வாசிப்பின் பக்கம் மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான காரணி சுவாரசியம். அதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது பேசுபொருள் கூடவே பேசுபொருளின் மீதான எழுத்தாளரின் பாண்டித்யம். இவை அனைத்தையுமே இப்புத்தகம் உள்ளடக்கியது என தயங்காமல் சொல்லுவேன்.
*
வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் - அமேஸான் கிண்டில் பதிப்பு.

சுட்டி -- https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-vasippathu-eppadi-Tamil-ebook/dp/B086HPBW13/ref=sr_1_1?crid=1PVYGT6XILHRB&dchild=1&keywords=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&qid=1586616023&sprefix=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%2Caps%2C380&sr=8-1

4 comments:

kumarshanmugam said...

சிறப்பு

Sengai Podhuvan said...

தளை தட்டும் குறள்

காளீஸ்வரன் said...

நன்றிங்க குமார் :)

Praveen KR said...

அருமை