என்னை எண்ணையாக்கி
என்னுள்ளே எரியவைத்து
முன்னம் முளைத்திருந்த
மூடத்தனம் முடித்த
ஒற்றைப் பொறி
நீ என் வாழ்வின் நெறி
காதல் தீயே
நீ என் கண்மணித் தாமரையே !
குடிக்கையில் உன் அருகிருக்கையில்
குளிக்கையில் உன்னை நினைக்கையில்
குளிரவைத்தாய்
சோகங்கள் மாசுகள் குறைய வைத்தாய்
உடலுக்குள் உதிரமானாய்
ஊற்றெடுக்கும் திரவத்தின்
வேரானாய் நீரே
நீயே நீரே !
உடல் இல்லாமல் உடனிருப்பாய்
உயிர் முழுக்க
நிறைவாய் நின்றாய்
புயலாய் சினந்தாலும்
ஆடிக்காற்றாய் எறிந்தாலும்
தென்றலாய் நாணி
தேவதை நீ நின்றாலும்
உனை நீங்காதிருக்க
தவம் கிடப்பேன்
வாசமுள்ள காற்றடி நீ
என் வண்ணத்தமிழ் மோகினியே !
அருவியாய் கடும் சொற்கள்
அறைந்து நான் இறைத்தாலும்
அமைதியையே அளிப்பாய் - பின்
அழகாய் வழி நடத்துவாய்
வண்ண மண்
வாச மண்
விழுந்த மண் - என்
வேர் தாங்கும் மண்
என் தடம் பதிந்த மண் - நீ
என்னுள் தடம் பதித்த பெண்
பொன்னான மண் - நீ
எனக்கான பெண் !
என்னுள் உனக்கு
எல்லையே இல்லை
நீ இல்லாமல் எனக்கு
யாவுமே தொல்லை
உன் நிழலுக்கும்
என் நெஞ்சில் அந்தமே இல்லை
உன் நினைவுதான் என் வேலை
ஒட்டுமொத்த உலகுக்கும்
ஒரே வானம் - என்
ஒட்டுமொத்த வாழ்வுக்கும்
நீதான் பிரதானம் !
ஐம்புலன் அடங்கும் காதலில்
ஐம்பூதங்களும் அடங்கும் உன்னுள்
நீ தேவதை !
என் காதல் தேவதை !
No comments:
Post a Comment