title


கதர்க்கடையும் சனிக்கிழமையும் – 2

என்னுடைய முக்கியமான நோக்கமே வீட்டுக்குத் தேவையான பொருட்களை காதியில் வாங்க வேண்டுமென்று இருந்ததால் முதலில் நான் நுழைந்தது மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் பகுதிக்கு. ஊதிபத்தி, கற்பூரம் துவங்கி குங்குமப்பூ, பாதாம், ஜாம் வரை அனைத்துப் பொருட்களும் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காதி என்றாலே விலை அதிகமாயிருக்கும் என பொதுவான ஒரு கருத்துண்டு ( அடேங்கப்பா கதர்க்கடைக்கு போனா ஆன (யானை ?) வெலை குதர (குதிரை !) வெலை சொல்லுவான் என ஒரே ஒரு முறை கூட அந்தப்பக்கம் போகாத ஆசாமிகளும் சொல்லுவார்கள்). ஆனால் நானறிந்தவரை காதியில் தரமான பொருட்கள் அந்த தரத்துக்கேற்ற விலையுடன் இருக்கும் (இன்னும் கூட என் அம்மாவின் சொந்த ஊர் / அப்பாவின் சொந்த ஊர் பெரியவர்கள் தன் கல்யாணத்துக்கு வாங்கின காதி செருப்பு பேரனைப் பார்க்கப் போகும்போது அறுந்து போனதென்னி வருந்துவதாக கேள்வி ).

முதன்முதலாக நான் தேர்வுசெய்து எடுத்த பொருள் பாரா புகழ் (பாரா -> பா. ராகவன்) அபராஞ்சி குளியல் சோப், தொடர்ந்து ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, ஜாம், பருப்பு வகைகள், பனங்கற்கண்டு என தேவையான பொருட்களனைத்தையும் வாங்கிமுடித்தேன். மொத்தத் தொகையையும் கடனட்டை மூலமாக செலுத்திவிட்டு (கடனட்டை உபயோகிக்க பில் தொகை குறைந்தபட்சம் ரூ 250/- இருக்கவேண்டும்) மற்ற இடங்களுக்குச் சென்றேன்.

தோல் பொருட்களான ஷூ, செருப்பு, பெல்ட் மற்றும் பிற பொருட்களுக்கென்று தனித்தனியாக ரேக்குகள் நேர்த்தியான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காதியில் தரத்தைப் பற்றிய கவலை தேவையில்லாதது, அதிலும் தோல் பொருட்கள் சிறந்த தரத்துடன் இருக்கும். கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யுமிடம் பெரியது. சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள் துவங்கி, மிகப்பெரிய சிலைகள் வரை காணக்கிடைத்தன (மரத்தினால் ஆனவை / உலோகத்தால் ஆனவை). எந்த விலையில் வேண்டுமானாலும் நல்ல பரிசுப்பொருட்கள் வாங்க தாராளமாய் காதியை நாடலாம்.

என்னைக் கவர்ந்த மற்றுமொரு முக்கிய அம்சம், ஒரு சிலர் தவிர அங்கு பணிபுரிந்த அத்தனை பேருமே வாடிக்கையாளர்களிடம் மிகத்தன்மையாக நடந்து கொண்டதுதான் (என் சொந்த ஊரில் இருக்கும் கதர்க்கடை ஊழியர் வாடிக்கையாளர்களிம் காட்டும் பரிவைக்(?) கண்டால் காந்திகூட அவரை கல்லால் அடிப்பார்). எது எப்படியானாலும் இந்தியத்தயாரிப்புகளை உபயோகிக்க வேண்டுமெனும் என் ஆசை மீண்டுமொரு முறை துவங்கப்பட்டது. (இம்முறை சற்றே வீரியமாக.)

வெளியே வரும் போது நன்னாரி சர்பத் மற்றும் பதனீர் இரண்டையும் ஒரு பிடி பிடித்தேன் (குடி குடித்தேன் !). வெளியேரும் முன்னர்தான் கவனித்தேன் புத்தகங்கள் கூட அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை. தன் சுயசரிதையிலிருந்த மகாத்மா புன்னகைத்து விடைகொடுத்தார்.

(முற்றும்)

1 comment:

Lavanya Bharath said...

Hi kalees,
Was speechless for a while, after browsing through your blog. It was like talking to a good old friend all nostalgic memories. Great going fren..good, keep it up. Happy Writing :-)