title


கதர்க்கடையும் சனிக்கிழமையும் - 1

என்னால் இயன்றவரையில் இந்தியத் தயாரிப்பான பொருட்களை மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்பது என் நீண்டகால ஆசை. அவ்வப்போது அதை முயற்சித்துப் பார்க்கவும் தவறியதில்லை. டாபர் பேஸ்ட் துவங்கி வீக்கோ கிரீம் வரை எல்லவற்றையும் புதிது புதிதாய் முயல்வதும் பின் தவிர்க்கவியலாத காரணங்களால் மீண்டும் கிடைக்கின்ற பொருட்களை உபயோகிப்பதும் என மாற்றி மாற்றி விளையாடிக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் எழுத்தாளர் பா. ராகவன் அவைகளின் காதி ( நம்ம பாசைல சொல்லோணும்ன கதர்க்கடைங்கோ) அனுபவங்களை படிக்க நேர்ந்தது (இணைப்பு தர இயலவில்லை. ம்ன்னிக்க). அவ்வளவுதான் எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த சுதேசி தாகம் விழித்தெழுந்தது. பதிவைப் படித்த நாள் முதற்கொண்டே அண்ணாசாலை காதி கிராமோத்யோக் பவன் (பெயர் தவறாக இருப்பின்.... ஒண்ணும் செய்யவேண்டாம், சரியாக எடுத்துக் கொள்ளுங்கள் ) பற்றிய கற்பனைகளில் மிதப்பது, கூகுள் மேப்பில் தேடுவது என ஏகத்துக்கும் ரகளை செய்து கொண்டிருந்தேன். ஒரு வழியாக அந்த வார இறுதியில் சனிக்கிழமையன்று வண்டியை எடுத்துக்கொண்டி காதியை நாடி ஓடினேன் (ஓட்டினேன் ?).

சென்னை அண்ணாசாலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகத்திற்க்கு நேர் எதிரில் அமைந்திருந்தது “காதி கிராமோத்யோக் பவன்”. வண்டியை நிறுத்த போதுமான இடமின்றி சற்றே சிரமப்பட நேர்ந்தது (தனியாக பார்க்கிங் இடமென்று ஏதுமில்லை, கடையின் முன்புறமிருக்கும் 15 * 15 அளவுள்ள இடம்தான் வண்டிகளை நிறுத்த). ஒரு வழியாக கிடைத்த சந்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழையும்போதே ”பதனீர் : ரூ 6/-”, “நன்னாரி சர்பத் : ரூ 6/- ” என அறிவிப்புப் பதாகைகள் வரவேற்றன. எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் (சிங்கம் எங்கயாவது சர்பத் சாப்பிட்டுமா? போன்ற அறிவுப்பூர்வமான் விவாதங்கள் வேண்டாம்) லேசாக முழித்தது. சரி சரி வரும் போது ஒரு கை (வாய் ?) பாத்துக்கலாமென்று அதை சமாதானம் செய்துவிட்டு வலது காலை வைத்து உள்ளே நுழைந்தேன் ( நாம உள்ள போனாலே பிரச்சனைதான் இதுல எந்த காலை வச்சு உள்ள போனா என்ன?).

அண்ணாசாலை காதிபவன் இரண்டு தளங்கள் கொண்டது. மேல்த்தளம் முழுவதும் கைத்தறி ஆடைகளுக்கானது. கீழ்த்தளத்தில் நுழைந்தவுடன் இடதுகைப்புறம் மளிகைப்பொருட்கள் மற்றும் பூஜை / வாசனைப் பொருட்கள் வாங்கலாம். வலதுகைப்புறம் தோல் பொருட்கள் (கைப்பை / செருப்பு / பெல்ட்) விற்பனை செய்யுமிடம். நீண்ட கூடத்தின் கடைசியில் கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்களின் அணிவகுப்பு. முன்புறத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பூஜையறை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

(தொடரும்...)

No comments: