title


நாகம்மாள்


ஒவ்வொரு முறை மதுரையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைப் பார்த்தபின்னும் நான் பிறந்த கொங்கு மண்டலத்தின் கலைவீச்சில் ஒரு தேக்கம் இருப்பதாகத் தோன்றும். அதைப்போலவே ஏதேனும் நல்ல நாவல் படித்தபின் என் மண் சார்ந்து இப்படிப்படிப்பட்ட நல்ல படைப்புகள் இல்லையே எனும் ஏக்கம் தோன்றுவதுண்டு. ஆனால் இவை அனைத்துக்கும் என் அறியாமைதான் காரணம் என்பதை “நாகம்மாள்” நாவலைப் படித்தபின் உணர்ந்து கொண்டேன். மண் சார்ந்த மக்களின் வாழ்வை அந்த வாழ்வின் இயல்பு கெடாமல் அப்படியே பதிவு செய்துள்ளார் திரு. ஆர். ஷண்முகசுந்தரம்.

”தமிழ் நாவல்களின் தலைசிறந்த பெண்பாத்திரப் படைப்புகளுல் நாகம்மாளும் ஒருத்தி” என்ற விமர்சனவரிகளின் மூலமாகத்தான் எனக்கு நாகம்மாள் நாவல் அறிமுகமானது. அந்த வரிகள் என்னுள் ஏற்படுத்திய சித்திரத்துக்கும் நாகம்மாள் கதாபாத்திரத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. நாகம்மாள் நம் அன்றாட வாழ்வில் கண்டுவரும் ஒரு மிக மிக சாதாரணமான, இயல்பான பெண்.

இந்த கதை நிலம் சார்ந்த தொழில்புரியும் குடும்பங்களின் ஆகப்பெரும் ஒரே சொத்தான நிலத்தை அடிப்படையாக கொண்டு ஏற்படும் கலகங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அத்தகைய கலகங்களில், கதை நாயகியாக முன்னிறுத்தப்படும் நாகம்மாள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பெரும் குழப்பத்தினூடே எடுக்கப்பட்டவை. தன்னுடைய சுய அறிவை புறந்தள்ளிவிட்டு அடுத்தவர் சொல்படி ஆடும் நாகம்மாள், இடையிடையே தன்னுடைய முடிவுகள் தவறோ என எண்ணுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இயல்பான ஒரு மனித சித்திரத்தை நாகம்மாளுக்கு வழங்குகிறது.

தன் முடிவுகள் யாவையும் தன்னுடைய முழு மனதோடு எடுக்கப்பட்டவையல்ல என்று தெரிந்தபோதும் ஒன்றும் செய்யவியலாத நிலையில் அகப்பட்டுக்கொண்டு அதையே தன் விருப்பமாக எண்ணிக்கொள்ளும்போது நாகம்மாளின் மீது கோபம் வருவதைப்போலவே பரிதாபமும் எழுகின்றது.

மொத்தத்தில் நாகம்மாள் நாவலை படித்து முடித்தபின் எஞ்சுவது நல்லதொரு அனுபவம். நூறு சதவிகித நல்லவன், நூறு சதவிகித கெட்டவன் என எவருமில்லை என்பதே யதார்த்தம். காலத்தின் கோலத்தில் எல்லாரும் வெறும் புள்ளிகள் மட்டுமே

நூல்                : நாகம்மாள்
எழுத்தாளர் : ஆர். ஷண்முகசுந்தரம்
பதிப்பகம்    : காலச்சுவடு (கிளாசிக் வரிசை)
விலை          : 90 ரூபாய்

No comments: