யுகந்தோறும்
துகிலுரியப்பட்டுக்
கொண்டேயிருக்கின்றனர்
பாஞ்சாலிகள்....
காக்க எதிர்நோக்கும்
கண்ணனின்
கண்களும் கைகளும்
கருந்துணியால்
கட்டப்பட்டு.....
பணயம் கேட்பவனும்
கேட்பதையே வைப்பவனும்
என எல்லாமுனைகளிலும்
சகுனியே நிறைந்திருக்க
என் செய்யக்கூடும்
பணயப்பொருள் ?
கும்பிக்கு உணவுக்கே
கும்பிட்டு விழவேண்டியிருக்க
குருதித்தைலம் தேய்த்து
கூந்தல் முடியும்
சபதமெல்லாமில்லை...
ஐந்தாண்டுக்கொருமுறை
ஆட்களும் ஆட்சியும்
மாறினாலும்
மாறுவதேயில்லை
பகடையாட்டம்....
எவன் வந்தாலும்
இயல்பு மாறாமல்
எண்ணிக்கை மட்டுமே
மாறுமிந்த திருநாட்டில்
லட்சங்களென்பதும்
கோடிகளென்பதும்
லட்சம் கோடிகள் என்பதும்
எண்கள்.....
வெறுமனே எண்கள்...
No comments:
Post a Comment