title


மண்ணும் மனிதரும்

‘பொட்டக்காடா இருந்தாலும் அதுதாண்டா உனக்கு அடையாளம். நீ செத்தா விளப்போற எடம்டா அது. நாளைக்கு உம்பிள்ளையும் அங்கதான் அடங்குவான்…டேய் மண்ணில்லாதவன் மனுசனில்ல. மிருகம்…தெரிஞ்சுக்க’

சுடலையிடம் சேத்துக்காட்டார் (ஆசான் திரு.ஜெயமோகனின் குருதி சிறுகதையில்)
****

மண்ணும் மனிதரும் நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் போது அடிக்கடி மனதில் தோன்றிக்கொண்டிருந்த பெயர் சேத்துக்காட்டார். ஆசானின் குருதி சிறுகதையில் வரும் கதாப்பாத்திரம். ஆனால், அந்தச் சிறுகதையின் களமும், மையமும் முற்றிலும் வேறானது. எனக்கு ஏன் அந்தப் பெயர் தோன்றிக் கொண்டேயிருந்தது என்பது புதிர்தான்.

நாவலில் வரும் லச்சன் பாத்திரம் துவக்கம் முதலே தன் வீட்டை, நிலத்தை, ஊரை விட்டு விலகியே இருப்பது அவனது தான்தோன்றித்தனமான வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கலாம். அதே சமயம், அம்மண்ணின் மீதான பிடிப்பே லச்சனின் அத்தை சரஸ்வதி மற்றும் மனைவி நாகவேணி இருவரையும் மீண்டும் மீண்டும் “கோடி” கிராமத்திலேயே இருக்க வைக்கிறது.

கணவனை இழந்த சரஸ்வதி தன் புகுந்த வீட்டில் (மந்தர்த்தி) சிக்கலில்லாமல் வாழ்ந்திருக்கக்கூடும், என்றாலும் தன் பிறந்த வீட்டுக்காக இறுதிவரை உழைக்கிறாள். மறுபக்கம் தன் பிறந்த வீட்டில் நிம்மதியான வாழ்க்கை வாழ இயலும் என்றபோதும் நாகவேணியோ மீண்டும் மீண்டும் ”கோடி” கிராம வாழ்க்கையையே தேர்ந்தெடுக்கிறாள். தன் மாமனாரான இராம ஐதாளர் தன் பெயரில் எழுதிவைத்த சொத்தை, சின்ன சஞ்சலத்தால் இழந்ததன் குற்றவுணர்ச்சி, கூடவே தன் மகன் ராமன் மூலமாக, ஐதாளர் குடும்பத்தின் சொத்தை, கெளரவத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமை தனக்கிருப்பதாக நாகவேணி கருதுவதும் அவளை கோடி கிராமத்திலேயே வைத்திருக்கிறது. மாறாக, சரஸ்வதியை மந்தர்த்தியுடன் கட்டி வைக்கும் எவ்வித பிணைப்பும் இருப்பதில்லை.

லச்சனின் பொறுப்பின்மையால் பெரும் மனச்சுமை கொள்ளும் நாகவேணி, ராமனின் வாழ்க்கைக்காக பிறந்த வீட்டுக்கு சென்று தங்குகிறாள் (பின்னர், சூழ்நிலையினாலும் புகுந்தவீட்டில் தனக்கிருக்கும் கடமையினாலும் கோடிக்கே திருப்புகிறாள்). ”கோடி” கிராமத்தில் ஓயாது வேலை செய்து பழகிவிட்டதால், பிறந்த வீட்டில் அவளுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. ஆர்வத்துடன் அவள் கற்றுக்கொள்ளும் வயலின் இசை அவளது மனவருத்தங்களுக்கான தற்காலிக மருந்தாக அமைகிறது.

இராம ஐதாளர் தன் சகோதரி சரஸ்வதியையோ அல்லது முதல் மனைவி பார்வதியையோ குடும்ப விசயங்களில் கலந்து ஆலோசிக்கும் அளவுக்கு பொருட்படுத்துவதில்லை. நாவலின் துவக்க அத்தியாயங்களில், சரஸ்வதி இக்குறையை நேரடியாக வெளிப்படுத்தவும் செய்கிறார். ஆனாலும், பெண்களை பெரிதும் பொருட்படுத்தாத ராம ஐதாளர் தன்னுடைய வீட்டில் ஒருவருடைய குரலுக்கு விஷேச மரியாதை தந்தாரென்றால் அது சரஸ்வதியின் குரலுக்கு மட்டுமே. தன்னுடைய இரண்டாம் திருமணத்தின் போது கோபித்துக்கொள்ளும் சகோதரியை சமாதானப்படுத்துவது, சீனப்பன் வீட்டைப் பார்த்து தன் வீட்டை மாற்றி அமைக்க எண்ணும்போது சரஸ்வதியின் அறிவுரையைக் கேட்பது என பல இடங்களில் சரஸ்வதிக்கான முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

இந்நாவலில், ஐதாளர் முக்கியமான ஒரு விசயத்தில் சரஸ்வதியின் பேச்சை மதிப்பதில்லை. அது லச்சனின் படிப்பு. பார்வதியுடனான லச்சனின் பாசத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேவை சத்தியபாமைக்கு இருக்கிறது. சீனப்பனின் வளர்ச்சி, அதனால் ஊரில் உயரும் அவனது செல்வாக்கு, கூடவே புரோகிதத்துக்கான மரியாதை குறைதல், இவற்றை எதிர்கொள்ள லச்சனை ஆங்கிலம் கற்கவைக்க எண்ணுகிறார் ஐதாளர். இவற்றால், லச்சன் அவனது பாட்டனார் படுமுன்னூர் மாதப்பையர் வீட்டில் தங்கிப் படிக்க நேர்கிறது. லச்சன் கோடியிலேயே வளர வேண்டியதன் அவசியம் குறித்த சரஸ்வதியின் வாதம் ஐதாளரிடம் பலனளிக்கவில்லை. அவ்வகையில் தன் வீட்டார் மீதான லச்சனின் விலக்கம் சரஸ்வதியால் முன்கூட்டியே யூகிக்கப்படுகிறது. அந்த விலக்கமே மெல்ல மெல்ல லச்சனை இருளை நோக்கி நகர்த்துகிறது.

லச்சனின் மகன் ராமன், தன் தாய்வீட்டார் உதவியுடன் படிக்கிறான். சிறுவயதில் கிறுக்கல்களாக ஓவியங்கள் வரைபவனாகவும், வயலின் கலையில் கொஞ்சம் ஞானமுள்ளனவனாகவும் வளர்கிறான். கோடி கிராமத்துடனான அவனது உறவு இரண்டு விசயங்களால் வலுப்பெறுகிறது. ஒன்று கோடி கிராமத்துடனான நாகவேணியின் பிணைப்பு, இரண்டாவது ராமனின் “கடல்” பித்து. படிக்கும் காலத்திலும், பின்னர் வேலை தேடும் தருணங்களிலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் கோடி கடற்கரையில் அமர்ந்து தன் அன்னையுடன் பேசி மகிழ்கிறான் ராமன். வேலை தேடி சென்னை, பம்பாய் என பெரு நகரங்களில் வாழும் போதும், அவ்வூர்களின் கடற்கரைகள் “கோடி” கடற்கரை அளவுக்கு அவன் மனதுக்கு நெருக்கமாயிருப்பதில்லை. ஓவியக்கலை வித்தகர் நோவாவுக்கு அனுப்பவேண்டிய படமாக ராமன் வரைவது அவனது ஊரின் கடலைத்தான்.

சுதந்திரப் போராட்டம், கம்யூனிசம் என அக்காலகட்டத்தின் இளைஞர்களின் ஆர்வம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தன்னை வேலையை விட்டு தூக்கிய பின்னர், அதுவரை வேலை பார்த்துவந்த ”ஸ்நோ” கம்பெனிக்கு முதலாளித்துவ பட்டம் கட்டும் கங்காதரன் பாத்திரம் வாயிலாக, அக்கால இளைஞர்களின் அரசியல், சமூகம் பற்றிய மேம்போக்கான புரிதலும் காட்டப்படுகிறது.

நாகவேணிக்கு சொத்தை எழுதிவைத்ததன் மூலமாக, கோடி கிராமத்துடன் அவளைப் பிணைத்து வைத்த ஐதாளர், தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 30 பொன் காசுகள் மூலமாக பேரன் ராமனை மீண்டும் கோடி கிராமத்துக்கே வர வைக்கிறார். அவ்வகையில் லச்சன் விசயத்தில் நேர்ந்த பிழை, ராம ஐதாளராலேயே நிகர் செய்யப்படுகிறது.

நாவலைப் படித்துமுடித்த பின்னர் தோன்றியது “மண்ணின் மீதான பிடிப்பே ராமனை மீண்டும் அவனது கிராமத்து வாழ்க்கைக்குத் திரும்பவைத்தது. அந்தப் பிடிப்பில்லாத லச்சனின் வாழ்வு அலைக்கழிக்கப்படுகிறது”.

அவ்வகையில் சேத்துக்காட்டார் சொன்னது சரிதான் “மண்ணில்லாதவன் மனுசனில்ல”.

No comments: