title


செப்டம்பர் 17, 2013

”எப்பப் பாத்தாலும், எல்லா விசயத்துலயும் உம்மட சவுரியத்துக்கே நடக்கணும்னு நெனச்சா, அது ஆவாது “

வழக்கம்போல முதல் எதிர்ப்பு தெரிவித்தார் அம்மா.

“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல, ஆனா அம்மாவோட விருப்பத்தையும் பாக்கணும்ல”

அப்பாவிடமிருந்து வழக்கமான ரியாக்சன்தான் இது ”எனக்கு ஓகே, ஆனா அம்மா கோவிச்சுக்குவா அதனால ஓகே இல்ல” ரகம்.

ஆனா பாருங்க, அருணாவ இந்த விசயத்துல நான் பாராட்டியே தீருவேன். எப்பயுமே எம்பட பக்கம்தான் பேசுவா. அதுவும் எப்படித் தெரியுமா?

“உங்களுக்கு புடிச்சிருந்தா செரி” இது எங்கிட்ட சொல்லுறது. அதே விசயத்துக்கு சபைல சொல்லுறது இது : “விடுங்க மாமா, அவரு யாரு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அவரு சொல்லுறத தான் நாம கேட்கோணும்”

மீண்டும் அம்மா துவங்கினார் “அப்படித்தான் பையனுக்கு பேர் வக்கிறதுக்கும் ஒரேயடியா புடிவாதம் புடிச்சான்.”

“அப்படியில்லமா” எனச்சொல்லத் துவங்கியவனுக்கு, “அடப்போ, உனக்கெல்லாம் ஒண்ணுந்தெரியாது.” என கோபமான பதில்தான் கிடைத்தது.

நான் ஒரு பூடிசு (Shoe) வாங்கணும்னு சொன்னாலே, நார்மலா நாலு ரவுண்டு டிஸ்கசன் ஓடும், இப்ப பேசுறதோ பெரிய விசயம் நாயமா நாப்பது ரவுண்டு டிஸ்கசன் ஓடியிருக்கணும்.

ஆனா, கொஞ்ச நேரம் கெஞ்சியபின் என் விருப்பத்துக்கே (வழக்கம்போல) அனைவரும் இசைந்தார்கள்.

”செரி, ஒம்பட ஆசப்படியே செவ்வாக்கிழமை வச்சுக்கலாம்.” விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அப்பா. நான் அவ்வளது தூரம் அடம்பிடித்தற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு.

செப்டம்பர் 17, 2013 ஒரு செவ்வாய்க்கிழமை, எனக்கு மிகப்பிடித்த முருகருக்கு உகந்த நாள். இரண்டாவது காரணம் சமுதாய மறுமலர்ச்சி, சாதி/மத வேறுபாடுகளை ஒழிக்கப் பாடுபட்ட “தந்தை. பெரியார்” பிறந்த தினம் செப்டம்பர் 17.

இந்த முறை சிசேரியன் என்பது மருத்துவரால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதற்கான நாள் தேர்ந்தெடுக்கத்தான் இவ்வளவு அக்கப்போர்களும்.


செப்டம்பர் 17, 2013 – செவ்வாய்க்கிழமை – காலை சுமார் 8:50 மணிக்கு, பெண்ணுரிமைக்காக(வும்) போராடிய தந்தை பெரியார் பிறந்தநாளில், அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில், என் மகள் “கிருத்திகா” பிறந்தாள் J

பிறந்தநாள் வாழத்துகள் பாப்பு, இது உனக்காக

https://www.youtube.com/watch?v=HcLjkBdzunY


No comments: