title


மழைத்தண்ணியும் யேசு மேஸ்த்திரியும் - II


யேசு, அந்த வண்டி இப்ப வராது போலருக்கு; என்ன பண்ணுறது?

“சரீங்க மொதலாளி அர(அரை)நாள் கூலி மட்டும் கொடுங்க. நாளக்கி இல்லாட்டி நாளனக்கி தண்ணிய புல்ல எடுத்த பிப்(ற்)பாடு வேல செய்யலாம்

“ஏண்டா புரியாம பேசற? நாளக்கி நாளனக்கின்னெல்லாம் தள்ளிப்போடுற வேல்யே ஆவாது. ஒரே முட்டா வேல நடக்கணும். எவன் உம்மட பின்னாடி அலையறது?

“தண்ணி ரொம்பி கெடக்குங்க மொதலாளி. அத எடுக்காம வேல செய்ய முடியாதுங்க

ஆர்ரா இவன்.. சொன்னதயே மறுக்கா மறுக்கா சொல்லீட்டு...

மீண்டும் சில நிமிடங்கள் பேச்சு நீண்டது...

“சரீங்க... நாந்தா விவரமில்லாம பேசுறேன்... நீங்களே சொல்லுங்க என்ன பண்ணுறது ? சலித்தவாறே சொன்னார் யேசு.

இதற்காகவே காத்திருந்ததைப்போல அவர்கள் சொன்னார்கள். இன்றளவும் என்னால் மறக்கமுடியாத, மறக்கவும் கூடாத அந்த வலிமிகுந்த நிகழ்விற்கு அச்சாரம் போடப்பட்டது.

“இதப்பாரு யேசு வேல நடந்தே தீரோணும்; நல்ல பாரு இது மழத்தண்ணி மாறிதான கெடக்கு; அவனயும் இவனயும் புடுச்சு தொங்கறதுக்கு உங்க ஆளுங்களயே உட்டு சுத்தப்படுத்த சொல்லு. உண்டானத கேளு தந்துரலாம்பீடிகை ஏதுமின்றி துவங்கினார் என் நண்பனின் தாய்.

கொஞ்ச நேரத்துக்கு யேசுவால் பேசவே முடியவில்லை. பின்பு துவங்கினார்.

“ஏனுங்மா... இப்புடி சொல்லுறீங்க. அதெல்லாம் முடியாதுங்க. உள்ளுக்குள்ள இறங்கணும்னு நெனச்சாலே கொமட்டுதுங்க. உங்களுக்கே இது நல்லா இருக்கா?

“ஏண்டா இப்ப அவ என்ன சொல்லீட்டான்னு இந்த பேச்சு பேசற... அவ சொல்லுறதும் செரிதான. அதுக்கு உண்டாக காச கேளு தந்துடாலம்னு சொல்லுறாள்ள பொறகென்ன?இணைந்து கொண்டார் நண்பனின் தகப்பனார்.

“மொதலாளி....இழுத்தார் யேசு.

“என்ரா மொதலாளி கிதலாளின்னுட்டு... நல்லா பரு இது மழத்தண்ணி மாறிதான கெடக்கு குரல் உயர்த்தினார் நண்பனின் அப்பா.

இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்த நண்பனின் அண்ணனும் இப்போது வெளியே வந்தார். இப்போது நண்பனின் குடும்பமே சேர்ந்துகொண்டு யேசு மேஸ்த்திரியை கட்டாயப்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் மழத்தண்ணி மாறிதான கெடக்கு... மழத்தண்ணி மாறிதான கெடக்கு என சொல்லிவைத்தமாதிரி இறங்கச் சொன்னார்கள்.

ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாமல் அவர்கள் தொந்தரவும் தாங்காமல், அதுவரை மனதில் அடக்கிவைத்திருந்த அந்தக் கேள்வியை, கொஞ்சம் பணிவுடன் சிரித்துக்கொண்டு கேட்டே விட்டார் யேசு மேஸ்த்திரி.

“சரீங்க மொதலாளி நீங்களே சொன்னாப்புல மழத்தண்ணி மாறிதான கெடக்கு; பேசாம நீங்களே எறங்கிடுங்களேன்.

ஒரு நிமிடம் அவர் கேட்டதின் அர்த்தம் விளங்காமல் அல்லது அவரால் அப்படி கேட்க முடியுமென்பதை நம்பாமல் அமைதியாகினார் மூவரும்.

“அடி செருப்பால நாயி, என்னடா சொன்ன?பேச்சு வார்த்தையைத் துவக்கின நண்பனின் தாயே இம்முறை தமிழிலுள்ள அத்தனை கெட்டவார்த்தைகளின் பேச்சையும் துவக்கினார். தொடந்து அவர்கள் மூவரும் யேசுவின் குடும்பத்தையே வசைமாறிப்பொழிந்தனர். அதிலும் மேஸ்த்திரியின் வயதில் பாதிகூட நிரம்பியிராத என் நண்பனின் அண்ணன் அவரை செருப்பாலடிக்கப் பாய்ந்தார்.
இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் யேசு மேஸ்த்திரி அவர்களுக்கொன்றும் இளைத்தவரில்லை. இரு விரல்களில் மோதிரம், நல்ல தடிமனான மைனர் சங்கிலி, தங்க கெடியாரம் அணிந்து “HERO HONDA CD100பைக்கில்தான் பவனிவருவார். பின்பு ஊரில் நாலு பெரிய மனிதர்கள் இந்தப்பிரச்சனையைத் தீர்த்து விட்டார்கள். அந்த பிரச்சனை எப்படி தீர்ந்திருக்கும் / தீர்க்கப்பட்டிருக்கும் என என்னால் இப்போது ஊகிக்கமுடிந்தாலும், அப்போது எப்படி தீர்த்தார்களோ என்னவோ...ஆனால், மீண்டும் அந்த கட்டிடத்தை நல்ல முறையில் கட்டித்தந்த தந்ததென்னவோ யேசு மேஸ்த்திரிதான்.
சுட்டாலும் வெண்மை தரும் சங்கு திட்டினால் மட்டும் கோபிக்கவா செய்யும்?

No comments: