title


மழைத்தண்ணியும் யேசு மேஸ்த்திரியும் - I


எனக்கு அப்போது ஏறத்தாழ பத்து வயதிருக்கும். என் நண்பனொருவன் வீட்டுக்கு விளையாடச் சென்றிருந்தேன். அவன் வீட்டில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இப்போது சர்வாதிகாரம் புரியும் “வாஸ்து சாஸ்த்திரம்அப்போது என்ன நிலையிலிருந்ததோ தெரியவில்லை. அவன் வீட்டில் நடந்துகொண்டிருந்த வேலையின் பிண்ணனி இதுதான் “தற்போது கழிவறையும் செப்டிக் டேங்க்கும் உள்ள இடத்தில் ஒரு புதிய அறை அமைப்பது. கழிவறையையும் செப்டிக் டேங்க்கையும் பக்கவாட்டிலுள்ள காலி இடத்தில் புதிதாக கட்டிக்கொள்வது.

எங்கள் ஊரில் அந்தக் காலகட்டத்தில் கட்டிட வேலைகளில் கலக்கிக்கொண்டிருந்தவர் “யேசு மேஸ்த்திரி. அது புதிதாக கட்டுவதானாலும், பழைய கட்டிடங்களில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்வதானாலும் அனைவரின் முதல் தேர்வு அவராகத்தான் இருந்தார். அவருக்கு முன்னும் சரி பின்னும் சரி அவரளவுக்கு தனிக்காட்டு ராஜாவாக ஜொலித்த மேஸ்த்திரி எவருமில்லை. ஒரே சமயத்தில் எங்கள் ஊரில் கட்டப்பட்டுவந்த ஐந்தாறு கட்டிடங்களுக்கு அவரே மேஸ்த்திரியாக பணியாற்றிய பெருமையும் அவர்க்குண்டு. குடிப்பழக்கம், வேலையில் கொஞ்சம் சுணக்கம் என்றாலும் பொதுவில் நல்ல திறமைசாலி. அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து கிறித்தவராக மாறியிருக்க வேண்டும்.

நண்பனின் வீட்டு கட்டிட வேலைகள் அவர் பொறுப்பில்தான் விடப்பட்டிருந்தது. அன்றைய தினம் கட்டிட வேலைகளை முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தார் யேசு. நண்பன் வீட்டு கழிவறை முற்றிலுமாக இடிக்கப்பட்டுவிட்டது. அடுத்த வேலை செப்டிக் டேங்க்கை மூடுவது. அதுநாள்வரை உபயோகத்தில் இருந்ததால் செப்டிக் டேங்க்கின் முக்கால் பகுதிவரை தண்ணீர் நிரம்பியிருந்தது. அதை அப்புறப்படுத்தாமல் செப்டிக் டேங்க்கை மூடமுடியாது. இப்போது சென்னை போன்ற நகரங்களில் இருப்பதுபோல் கழிவு நீரெடுக்கும் இயந்திரங்களோ வாகனங்களோ பெருகியிருக்காத காலமது. எங்கள் பேரூராட்சிக்கென இருப்பது ஒரே ஒரு கழிவு நீரெடுக்கும் டிராக்டர். அதுவும் அன்றைய தினம் வரமுடியாத சூழல் (ஒன்று பழுதாயிருக்கும் அல்லது வேறெங்காவது அனுப்பியிருப்பார்கள்). நண்பன் வீட்டாருக்கு வேலையை தொடர்ந்து நடத்தியாக வேண்டும் என்ற எண்ணம். மேஸ்த்திரியை அழைத்து பேசத்துவங்கினர்.

No comments: