title


அடிப்பிரதட்சணம்

”ஏங்க, நானும் உங்ககிட்ட எத்தனையோ தடவ சொல்லியாச்சு…. நம்ம கல்யாணம் நல்லபடியா நடந்தா அடிப்பிரதட்சண்ம் பண்ணுறேன்னு முருகனுக்கு வேண்டியிருக்கேன். கைத்தமலை கோவிலுக்கு போய் வேண்டுதல நிறைவேத்தனுங்க”

திருமணமான நாள் முதற்கொண்டே என் மனைவி என்னிடம் கூறிவரும் விசயம் இது. அப்போதெல்லாம் எனக்கு ரொம்ப மகிழ்வாய் இருக்கும். ”பரவாயில்ல, நம்மளை கல்யாணம் பண்ணனும்னு இவ கோவிலுக்கெல்லாம் வேண்டியிருக்கா” என்று எண்ணிக் கொள்வேன்.

அதோ இதோ என இழுத்துக்கொண்டே வந்த வேண்டுதல் நிறைவேற்றும் படலம் ஒரு வழியாய் இந்த தீபாவளி விடுமுறையில் சாத்தியமானது. தீபாவளி முடிந்த அடுத்த நாள் கைத்தமலை கோவிலுக்கு சென்றோம். அன்று கந்த சஷ்டியானதால் கோவிலில் மிகவும் கூட்டமாக இருந்தது. அதைவிட கடுமையான வெய்யில் வேறு.

என் மனைவி வேண்டியிருந்ததோ ஆறு முறை அடிப்பிரதட்சணம் செய்யவேண்டுமென்று. அடிப்பிரதட்சணம் என்பது அடிமேல் அடிவைத்து பிரகாரத்தை வலம் வருவது ஆகவே நெடுநேரம் பிடிக்கும். அதுவும் ஆறு முறை என்பதால் இன்னும் அதிக நேரமாகும். எனவே கோவிலினுள் சென்றவுடன் இருவரும் நடக்கத்துவங்கினோம். என் மனைவி அடிப்பிரதட்சணம் செய்து வர அவளுக்கிணையான வேகத்தில் நானும் மெல்ல நடக்கலானேன். முதல் நான்கு சுற்றுக்கள் எதுவும் பேசாமல் வந்தோம். கொளுத்தும் வெயிலில் அவள் வேண்டுதலை நிறைவேற்றுவதைப் பார்க்கப் பார்க்க எனக்கு மிக நெகிழ்வாக இருந்தது.

பொங்கிவரும் பாசத்துடன் அவளைக் கேட்டேன் “ஏம்மா, ரொம்ப கால் சுடுதா? எனக்காக எதுக்கு இப்படியெல்லாம் வேண்டிக்குற ?”

அதற்கு அவள் சொன்ன பதிலில் என்னை வாயடைத்துப் போகச்செய்தாள்.

“சே சே காலெல்லாம் ஒண்ணும் வலிக்கலைங்க.... நான் எப்பயுமே இப்படித்தான், பரிச்சைல பாசாகணும், Practical பரிச்சைல நல்ல மதிப்பெண் வாங்கணும், இப்படியெல்லாத்துக்கும் ஆறு சுத்து எட்டு சுத்துண்னு அடிப்பிரதட்சணம்தான் பண்ணுவேன்”.


அந்த நிமிடம்வரை ஏதோ எனக்காக மட்டுமே அவள் இவ்வளவு சிரமப்படுகிறாள் என்றெண்ணி இறுமாந்திருந்தவன் அக்கணமே அடங்கிவிட்டேன்.

”அடக்கஷ்டகாலமே நம்மளை கல்யாணம் பண்ணுறதும், பரிச்சைல பாஸாகறதும் இவங்களுக்கு ஒண்ணா? அதுலயும் இருக்கறதுலயே கம்மியா 6 சுத்துன்னு வேண்டியிருக்கா”

என்ன கொடுமை சார் இது ......

1 comment:

Anonymous said...

:) neenga ithavathu vaendineengala???????