வெறும் காற்றால்
நிரம்பி வழிகின்றன
நம்முடைய தேநீர் கோப்பைகள் !
மெளனமே வார்த்தைகளாய்
கோர்க்கப்பட்டுள்ளதுதான்
நமக்கிடையே நடக்கும் உரையாடல்கள் !
அடிக்கடி நேரிடும்
சந்திப்புகள் யாவுமே
விபத்துகளாக மட்டுமே
முற்றுப் பெறுகின்றன !
எப்போதாவது அதிசயமாய்
மோதிவிடும் பார்வைகளுமிழும்
தாங்கவியலா கோபமூட்டும் வெறுப்பை !
அரிதினும் அரிதாக
பூத்தெழும் புன்னகையிலும்
பெருக்கெடுத்து ஓடுகின்றது கசப்பு !
என்றாலும்
விழிகளின் ஓரத்தில்
துளிர்த்திடும் சொட்டுக்
கண்ணீர் நிறுவும்
” பிரிதலென்பது வெறும் பசப்பு ” !
No comments:
Post a Comment