title


குரு தெய்வம்

” நாளைக்கி எங்கப்பன கூட்டிட்டு வாரென், அப்புறமிருக்குது கச்சேரி” பக்கத்தில் அமர்ந்திருந்த பெஞ்ச் மேட் சொல்லும்போது எனக்கு கலக்கமாகத்தான் இருந்தது. சமூக அறிவியல் மேப் முடிக்காதது மட்டுமில்லாமல், அந்த பயமுமின்றி பேசிக்கொண்டும் இருந்தது குற்றம். இருந்தாலும் ஆறாம் (ஏழாம் ?) வகுப்பு பையனுக்கு அந்த அடி கொஞ்சம் கூடுதல்தான்.
.
அவனது அப்பாவின் அதிவீரபராக்கிரமங்களை நண்பனே பலமுறை சொல்லிக்கேட்டதுண்டு. அந்தக் கதைகள் தந்த எதிர்பார்ப்பில், ஒரு விஜயகாந்த் அல்லது சரத்குமார் படக்காட்சியை எதிர்பார்த்து (எம்பட பையன நீயெப்புடிடா அடிக்கலாம் ? டிஷ்யூம் டிஷ்யூம்) ஆவலுடன் அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றேன். ”வாத்தியாரு அடிச்சாருன்னு சொன்னேன். மதியானச் சாப்பாடு முடிச்சிட்டு எங்கப்பன் வருவாரு” என்றான் நண்பன். அன்னைக்குன்னு பார்த்து சமூக அறிவியல் பாடமும் மதியானம்தான். காலையிலிருந்தே ஒரு சினிமா பட கீரோ ரேஞ்சுக்கு நண்பன் அலப்பறை பண்ணிட்டிருந்தான் (கூட, எங்க மாமனும் வருவாருண்ணு நெனக்கிறேன், அவரு சொன்னாத்தான் அப்பன் அடங்குவாரு; இல்லாட்டி நெம்ப பிரச்சன ஆயிடும்).
.
எதிர்பார்த்தபடியே, சரியாக சமூக அறிவியல் பாடம் நடந்துகொண்டிருக்கையிலேயே வந்து சேர்ந்தார் அவன் தந்தை. தனியாகத்தான் வந்திருந்தார். வகுப்பறைக்குள் வந்து தான் இன்னாருடைய தகப்பன் என அறிமுகம் செய்து கொண்டார். விசயத்தை கிட்டத்தட்ட யூகித்துக் கொண்ட ஆசிரியர், “அது வந்துங்க” என தன் தரப்பு நியாயத்தை சொல்லத்துவங்கினார். இருங்க என அவரை அமைதிப்படுத்திவிட்டு நண்பனை அருகில் அழைத்தார் அவன் தந்தை. எங்களையெல்லாம் கெத்தாக பார்த்தபடி சென்ற அவன் தலைமுடியை கொத்தாகப் பிடித்து ”சப்”பென்று ஒரு அறை விட்டார் அவனது தந்தை. பொறி கலங்கிப்போய் பெஞ்சு மீது சாய்ந்திருந்த நண்பனை, அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி ஆசிரியரைப் பார்த்து சொன்னார்
“இவன் ஒங்க புள்ள மாதிரி வாத்தியாரே, கண்ணு காத வுட்டுட்டு தோலை உரிச்சுப்புடுங்க .. இந்த நாய் படிச்சா போதும்”.
**
குருதான் தெய்வம் என சொல்லாமல் போதிக்கும் பெற்றோருக்கும்
எல்லாப் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாய் நினைத்து அறிவூட்(டிய)டும் ஆசிரியர்களுக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !

No comments: