எல்லா கிராமங்களிலும்
சுணங்காமல் வேலை செய்யும் மன வலிமையும் உடல் தினவும் கொண்ட இளைஞர்களை பார்த்திருப்போம்.
அப்படியொரு மனிதன்தான் “காளி”. அவனது உற்ற நண்பனின் தங்கை “பொன்னாள்”. ஆசை ஆசையாய்
நண்பனின் தங்கையையே மணம் புரிந்து ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவந்த போதும், வாரிசு
இல்லை என்பதை கனமான சுமையாக சுமப்பவர்கள். சமயங்களில் அவர்கள் அதை மறந்தாலும் சமூகம்
விடாமல் நினைவூட்டிகொண்டே இருக்கும் சாபம் பெற்றவர்கள். அடிப்படையில் இருவரும் ஒருவர்மீது
ஒருவர் அபரிமிதமான காதல் கொண்டவர்கள். அதனால்தான் ”காளி”க்கு (வழக்கம்போல) இன்னொரு
பெண்ணை திருமணம் செய்யும் யோசனையை “பொன்னா”வின் அம்மாவே முன்வைத்தாலும் அவனால் அதை
ஒப்பமுடியவில்லை. குழந்தை வேண்டி எல்லாவிதமான பரிகாரங்களையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றிய
பின்னரும் எந்த மாற்றமும் நிகழவில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் ஊராரின், உற்றாரின்
விஷம் தோய்ந்த வார்த்தைகளுக்கு அரணாகவாவது ஒரு குழந்தை வேண்டுமென்னும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
என்றாலும் நாளாக நாளாக காதல் கூடியதேயல்லாமல் குறையவில்லை.
இதன் பிண்ணனியில்,
இப்படிப்பட்ட மக்களின் துயர்தீர்க்க சென்ற நூற்றாண்டின் முற்பகுதிவரை “திருச்செங்கோடு”
ஆண்டவரை முன்னிருத்தி இருந்த (வெளியில் யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்காத) வழக்கத்தையும்
பதிவு செய்துள்ளார். எந்த ஆணும், பெண்ணும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத, நமக்கெல்லாம் அதிர்ச்சியளிக்கக்
கூடிய வழக்கம் அது. இப்படியான செறிவான கதையில் சமூகத்தை, அதன் மூளைமழுங்கிப்போன மூடக்கருத்துக்களை
சாடும் ஒரு பாத்திரமாக வருபவர் காளியின் சித்தப்பா “நல்லுப்பையன்”. திருமணம், குழந்தை,
சாதி என எல்லா நம்பிக்கைகளையும் நக்கலடிக்கும் ஒரு கலக்ககாரராக வடிவமைக்கப்பட்டிருக்கும்
இவரது பாத்திரம்தான் இந்த படைப்பில் என்னைக் கவர்ந்த பாத்திரம்.
கிராம மக்களின்
வாழ்க்கை, பேச்சு வழக்கு, உறவுகளுக்கிடையேயான மெல்லிய முடிச்சுகள், அற்புதமாக வாசிப்புத்தீனி
என எல்லாவிதத்திலும் ஒரு நிறைவைத்தந்த படைப்பு. நாவலின் உச்சமான இறுதி அத்தியாயங்கள்
(எனக்கு) கொஞ்சம் ஒட்டாமல், சினிமாத்தனமாக இருந்தது மட்டுமே ஒரு சின்ன உறுத்தல். மற்றபடி
ஒரு அற்புதமான நாவல் “திரு.பெருமாள்முருகன்” எழுதிய “மாதொருபாகன்”.
காலச்சுவடு
பதிப்பகம் – 190 பக்கங்கள் – ரூபாய்: 140/-
No comments:
Post a Comment