title


அதெச் செய்யுங்க மொதல்ல...

 

அதெச் செய்யுங்க மொதல்ல...

கடும்கோபத்துடன் தாத்தா எங்களை நோக்கித் திட்டியது, பழனி மலையில் தங்கத்தேர் பவனி வந்துகொண்டிருக்கும் நிலைகளுல் ஒன்றில். எங்களை என்றால் என்னை, அப்பாவை மற்றும் சித்தப்பாவை. இது ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முந்தைய கதை.

எப்போதும் போல் அவ்வருடமும், ஆடிமாத வளர்பிறை சஷ்டி அன்று மதியமே பழனி வந்து, மடம் ஒன்றில் அறை வாடகைக்கு எடுத்துவிட்டோம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மலையேறி சாமி தரிசனம் முடித்து தங்கத்தேர் உலாவையும் பார்த்தாயிற்று. இனி அறைக்கு சென்று உறங்குவதும், பின்னர் காலையில் மீண்டும் ஒருமுறை மலையேறி சாமி தரிசனம் செய்த பின்னர் வீடு திரும்புதலும் மட்டுமே பாக்கி. ஆனால், ஒவ்வொரு வருடமும் தவறாமல், எங்களுக்குள் நிகழும் விவாதம் அன்றும் நிகழ்ந்தது. அதுவே தாத்தாவின் கோபத்துக்கு காரணம். விவாதம் வேறென்றுமில்லை வள்ளுவரா சினி வள்ளுவரா என்பது. இரண்டும் பழனியில் இருக்கும் திரையரங்குகள். பேருந்தில் வரும்போது பழனி நெருங்குகையில், தொலைவில் தெரியும் பழனி மலையை பக்தியுடன் கைகள் வணங்கும்போதே, ஜன்னல் வழியே வள்ளுவரில் என்ன படம், சினி வள்ளுவரில் என்ன படம் என்பதையும் குறித்துக்கொள்வது வழக்கம்.

*

அப்பா அம்மா உட்பட அங்கு வரும் உறவினர்கள் பலரும் வருடத்தில் பார்ப்பது ஒரே ஒரு திரைப்படம்தான். அதுவும் பழனியில் மட்டுமே. அதனால்தானோ என்னவோ அங்கு திரைப்படத்துக்கு போவது ஒரு தவிர்க்கமுடியாத சடங்கு போல ஆனது. தங்கத்தேர் பார்த்தபின்னர் மீண்டும் ஒருமுறை சாமி தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வருவோம். தாத்தாவும் அவருடன் துணைக்கு சிலரும் எப்போதும் மடத்தில் தங்கிக்கொள்வர். கட்டிக்கொண்டு வந்த புளிச்சோறை அவசர அவசரமாக சாப்பிட்ட பின்னர் ஓட்டமும் நடையுமாக வள்ளுவருக்கோ சினி வள்ளுவருக்கோ (இரண்டும் அருகருகே இருப்பவைதான்) சென்று படம் பார்ப்போம். பார்க்கும் திரைப்படங்கள் சில முறை மிகவும் சலிப்பாக இருந்து திரையரங்கிலேயே தூங்கிவழிந்ததும் உண்டு. ஆனால், ஒரு வருடம் கூட தவறாமல் மனதை நிறைக்கும் மகிழ்வான தருணம் என்பது படம் முடிந்து மடத்துக்கு திரும்பி வருவதுதான்.

எப்படியும் 2 அல்லது 3 கிலோமீட்டர்களாவது இருக்கும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணம்தான். ஆனால், அந்தப்பயணத்தின் நாயகன் அப்பாதான். அன்றைய திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அல்லது அந்த வருடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என ஏதேனும் ஒன்றை முன்வைத்து பெரும் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டே வருவார். மலையேறிய அசதியோ தூக்கமோ எதுவும் அவ்வேளையில் பெரிதாகத் தோன்றாமல், சிரித்தபடியே கதை கேட்டுக்கொண்டே பல இரவுகள் நடந்திருக்கின்றேன். அப்படி தானும் உற்சாகமாய் இருந்துகொண்டு சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் அப்பாவின் சித்திரம் இவ்விரவில் எழுகிறது.

அப்படி, அப்பா மகிழ்ந்திருந்த தருணங்கள் பெரும்பாலும் மனிதர்களுடன் இணைந்திருந்த பொழுதுகள்தான். எதன் பொருட்டே ஆனாலும் மனிதர்களுடன் இணைந்திருக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அப்பா தவறவிட்டதேயில்லை.

உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் 2 மணி நேரம் நடக்கும் அடையாறு திருக்குறள் சங்க நிகழ்வில் கலந்துகொள்ள, சனிக்கிழமை இரவு பூண்டியிலிருந்து கிளம்பி, மூன்று நான்கு பேருந்துகள் மாறி, ஞாயிற்றுக்கிழமை காலை, பெருங்குடியில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு வருவார். வந்தவுடன், தான் வந்த தகவல் மற்றும் வரும்போது நடந்த நிகழ்வுகள் குறித்து நண்பர்களுடன் போனில் பேச்சு. இடையே குளியல், உணவு. மாலை திருக்குறள் சங்க நிகழ்வு. அங்கிருந்து அப்படியே கோயம்பேடு. திங்கள் காலை தன்னுடைய வழக்கமான கடை வேலை. அந்த இரண்டு மணி நேரங்களில் அவர் வயதொத்த ஒரு சிறு நண்பர் குழாம் அவருக்கு சென்னையில் உண்டாகியிருந்தது. அதன் பொருட்டே நாங்கள் சென்னையில் இருந்தவரை பெரும்பாலும் அப்பா அந்நிகழ்வை தவறவிட்டதேயில்லை.

*

அப்பாவின் சிரிப்பு, மனிதர்களுடன் கூடியிருப்பதில் அவருக்கிருந்த ஆசை, இடது கையின் மீது வலது கையை தட்டி சிரித்துக்கொண்டே அவர் பேசிய தருணங்கள் என பல நினைவுகளை கிளர்த்திக்கொண்டிருக்கிறது அன்னம் சிறுகதை (https://www.jeyamohan.in/132369/).

சக உயிர்களுடன் அன்புகொண்டு மகிழ்ந்திருக்கும் தருணங்களை சமன் செய்யும் எந்தக் கருவியும் இம்மண்ணில் இல்லை.

#தகப்பன்_சாமி

 

No comments: