title


அதெச் செய்யுங்க மொதல்ல...

 

அதெச் செய்யுங்க மொதல்ல...

கடும்கோபத்துடன் தாத்தா எங்களை நோக்கித் திட்டியது, பழனி மலையில் தங்கத்தேர் பவனி வந்துகொண்டிருக்கும் நிலைகளுல் ஒன்றில். எங்களை என்றால் என்னை, அப்பாவை மற்றும் சித்தப்பாவை. இது ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முந்தைய கதை.

எப்போதும் போல் அவ்வருடமும், ஆடிமாத வளர்பிறை சஷ்டி அன்று மதியமே பழனி வந்து, மடம் ஒன்றில் அறை வாடகைக்கு எடுத்துவிட்டோம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மலையேறி சாமி தரிசனம் முடித்து தங்கத்தேர் உலாவையும் பார்த்தாயிற்று. இனி அறைக்கு சென்று உறங்குவதும், பின்னர் காலையில் மீண்டும் ஒருமுறை மலையேறி சாமி தரிசனம் செய்த பின்னர் வீடு திரும்புதலும் மட்டுமே பாக்கி. ஆனால், ஒவ்வொரு வருடமும் தவறாமல், எங்களுக்குள் நிகழும் விவாதம் அன்றும் நிகழ்ந்தது. அதுவே தாத்தாவின் கோபத்துக்கு காரணம். விவாதம் வேறென்றுமில்லை வள்ளுவரா சினி வள்ளுவரா என்பது. இரண்டும் பழனியில் இருக்கும் திரையரங்குகள். பேருந்தில் வரும்போது பழனி நெருங்குகையில், தொலைவில் தெரியும் பழனி மலையை பக்தியுடன் கைகள் வணங்கும்போதே, ஜன்னல் வழியே வள்ளுவரில் என்ன படம், சினி வள்ளுவரில் என்ன படம் என்பதையும் குறித்துக்கொள்வது வழக்கம்.

*

அப்பா அம்மா உட்பட அங்கு வரும் உறவினர்கள் பலரும் வருடத்தில் பார்ப்பது ஒரே ஒரு திரைப்படம்தான். அதுவும் பழனியில் மட்டுமே. அதனால்தானோ என்னவோ அங்கு திரைப்படத்துக்கு போவது ஒரு தவிர்க்கமுடியாத சடங்கு போல ஆனது. தங்கத்தேர் பார்த்தபின்னர் மீண்டும் ஒருமுறை சாமி தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வருவோம். தாத்தாவும் அவருடன் துணைக்கு சிலரும் எப்போதும் மடத்தில் தங்கிக்கொள்வர். கட்டிக்கொண்டு வந்த புளிச்சோறை அவசர அவசரமாக சாப்பிட்ட பின்னர் ஓட்டமும் நடையுமாக வள்ளுவருக்கோ சினி வள்ளுவருக்கோ (இரண்டும் அருகருகே இருப்பவைதான்) சென்று படம் பார்ப்போம். பார்க்கும் திரைப்படங்கள் சில முறை மிகவும் சலிப்பாக இருந்து திரையரங்கிலேயே தூங்கிவழிந்ததும் உண்டு. ஆனால், ஒரு வருடம் கூட தவறாமல் மனதை நிறைக்கும் மகிழ்வான தருணம் என்பது படம் முடிந்து மடத்துக்கு திரும்பி வருவதுதான்.

எப்படியும் 2 அல்லது 3 கிலோமீட்டர்களாவது இருக்கும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணம்தான். ஆனால், அந்தப்பயணத்தின் நாயகன் அப்பாதான். அன்றைய திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அல்லது அந்த வருடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என ஏதேனும் ஒன்றை முன்வைத்து பெரும் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டே வருவார். மலையேறிய அசதியோ தூக்கமோ எதுவும் அவ்வேளையில் பெரிதாகத் தோன்றாமல், சிரித்தபடியே கதை கேட்டுக்கொண்டே பல இரவுகள் நடந்திருக்கின்றேன். அப்படி தானும் உற்சாகமாய் இருந்துகொண்டு சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் அப்பாவின் சித்திரம் இவ்விரவில் எழுகிறது.

அப்படி, அப்பா மகிழ்ந்திருந்த தருணங்கள் பெரும்பாலும் மனிதர்களுடன் இணைந்திருந்த பொழுதுகள்தான். எதன் பொருட்டே ஆனாலும் மனிதர்களுடன் இணைந்திருக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அப்பா தவறவிட்டதேயில்லை.

உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் 2 மணி நேரம் நடக்கும் அடையாறு திருக்குறள் சங்க நிகழ்வில் கலந்துகொள்ள, சனிக்கிழமை இரவு பூண்டியிலிருந்து கிளம்பி, மூன்று நான்கு பேருந்துகள் மாறி, ஞாயிற்றுக்கிழமை காலை, பெருங்குடியில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு வருவார். வந்தவுடன், தான் வந்த தகவல் மற்றும் வரும்போது நடந்த நிகழ்வுகள் குறித்து நண்பர்களுடன் போனில் பேச்சு. இடையே குளியல், உணவு. மாலை திருக்குறள் சங்க நிகழ்வு. அங்கிருந்து அப்படியே கோயம்பேடு. திங்கள் காலை தன்னுடைய வழக்கமான கடை வேலை. அந்த இரண்டு மணி நேரங்களில் அவர் வயதொத்த ஒரு சிறு நண்பர் குழாம் அவருக்கு சென்னையில் உண்டாகியிருந்தது. அதன் பொருட்டே நாங்கள் சென்னையில் இருந்தவரை பெரும்பாலும் அப்பா அந்நிகழ்வை தவறவிட்டதேயில்லை.

*

அப்பாவின் சிரிப்பு, மனிதர்களுடன் கூடியிருப்பதில் அவருக்கிருந்த ஆசை, இடது கையின் மீது வலது கையை தட்டி சிரித்துக்கொண்டே அவர் பேசிய தருணங்கள் என பல நினைவுகளை கிளர்த்திக்கொண்டிருக்கிறது அன்னம் சிறுகதை (https://www.jeyamohan.in/132369/).

சக உயிர்களுடன் அன்புகொண்டு மகிழ்ந்திருக்கும் தருணங்களை சமன் செய்யும் எந்தக் கருவியும் இம்மண்ணில் இல்லை.

#தகப்பன்_சாமி

 

ஒரு குடும்பம் சிதைகிறது

 எங்கே யார் இருமினாலும் அல்லது காய்ச்சல், சளி எனும் வார்த்தைகளைக் கேட்டாலுமே கூட மனம் பதட்டமடைந்த ஒரு காலகட்டத்தை இப்போதுதான் கொஞ்சம் கடந்து வந்திருக்கிறேன். அதுவும் இரண்டாவது கொரானா அலைக்குப் பின் கழித்த பல நாட்கள், வாழ்வின் மீது ஒருவித நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருந்தன. அதற்கிணையான பதட்டத்தை ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள பிளேக் காலகட்ட விவரணைகள் உருவாக்கின.

*

ராமச்சந்திர கிராமத்தின் கணக்குப்பிள்ளை ராமண்ணாவின் மறைவுக்குப் பின்னரான, அக்குடும்பத்தின் வாழ்க்கையினை மையமாகக் கொண்டு, அந்தக் காலகட்டத்தின், அக்கிராமத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையினை சித்தரிக்கிறதுஒரு குடும்பம் சிதைகிறதுநாவல்.

ராமண்ணாவின் மனைவி கங்கம்மா, அவளது இரு மகன்கள் சென்னிகராயன், அப்பண்ணய்யா. நாகலாபுரத்து கண்டி ஜோதிடரின் மகளான நஞ்சம்மா சென்னிகராயருக்கு மனைவியாகிறாள். தகப்பனின் கணக்குப்பிள்ளை வேலை முறைப்படி சென்னிகராயருக்கு கிடைப்பதில் உள்ள சிக்கலை கண்டி ஜோதிடர் தீர்த்துவைக்கிறார். ஆனால், சென்னிகராயருக்கு கணக்கு வழக்குகள் புரிவதேயில்லை, கணக்கு வழக்குகள் மட்டுமல்ல, உணவு ஒன்றைத்தவிரே வேறெதும் சென்னிகராயருக்கு புரிந்ததேயில்லை. கணவருக்காக கணக்கு வழக்குகள் பார்க்கத் துவங்கி அதன் நீட்சியாக குடும்பம் நடத்தும் முழுப்பொறுப்பையுமே நஞ்சம்மா ஏற்கிறாள். மாமியார் கங்கம்மாவின் துர்பேச்சுக்கள், அக்காலகட்டத்தில் பெண்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், கணக்குப்பிள்ளை வேலை பார்ப்பதால் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் என அனைத்தையும் தன் பொறுமையினால் எதிர்கொள்கிறாள் நஞ்சம்மாள். ஆனால், அப்பண்ணய்யாவின் மனைவியான சாதம்மாவுக்கோ அத்தனை பொறுமை இருப்பதில்லை, மட்டுமல்ல கெட்ட வார்த்தை பேசும் சென்னிகராயனை நஞ்சம்மாள் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் அதே தைரியம் தன் கணவனுக்கும் வந்துவிட்டது எனும் மனக்குறையும் உண்டு. ஆனால், கண்மூடித்தனமாக கோபம் கொள்ளும் தகப்பனார், தன் கணவனை என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும் என்ற நஞ்சம்மாளின் பயம் நியாயமானதே.

கருணையும் அன்பும் அறவுணர்வும் கொண்ட மனிதர்கள் ஒரு புறமும் வஞ்சம் சூது பொறாமை கொண்ட மனிதர்கள் மறுபுறமுமாக நஞ்சம்மாளின் வாழ்க்கை ஊஞ்சலாடுகிறது. மனிதர்கள் செய்யும் சூழ்ச்சியினை சக மனிதர்களின் ஆதரவால் சமாளிக்க முடிந்த நஞ்சம்மாள் இயற்கையின் சூழ்ச்சிக்கு முன் தோற்றுப்போகிறாள். பிளேக் எனும் கொள்ளை நோய்க்கு தன் மகளையும் மூத்த மகனையும் பலி கொடுத்த பின்னரும் தன் இளைய மகன் விசுவன் ஒருவனுக்காகவே வாழும் நஞ்சம்மாளையும் பிளேக் பலிகொள்கிறது.

இந்நாவலின் மற்றொரு வலுவான கதாப்பாத்திரம் மாதேவய்யா. எங்கிருந்தோ வந்து பல ஆண்டுகளாக ராமச்சந்திர கிராமத்திலேயே வாழ்ந்து வரும் சன்னியாசியான அவரது அறவுணர்வும், போதனைகளுமே, பெரும்பாலான இக்கட்டுகளில் இருந்து நஞ்சம்மாளை காக்கின்றன. உதாரணமாக உள்ளூர் ஜோதிடர்கள் (அண்ணா ஜோசியர், அய்யா ஜோசியர்) தங்களுடைய வசதிக்குத் தக்க பரிகாரங்கள், பூஜைகள் மற்றும் பஞ்சாயத்து பேசும்போதெல்லாம் அதிலிருந்து நஞ்சம்மாளை காப்பது மாதேவய்யாவின் சொற்களே. அந்த ஊருடன் எவ்வித தொடர்பும் இல்லாதவர் அவர். ஆனால், காசி வரை சென்றாலும் அங்கிருந்து திரும்ப வேண்டும் எனும் எண்ணம் வந்ததும் அவர் திரும்புவது ராமச்சந்திர கிராமத்துக்கே. அப்படி அவ்வூருடனான தன் பந்தத்தை இறுதியில் விசுவனின் வாழ்வின் பொருட்டு அவர் அக்கிராமத்தை விட்டு நீங்குவதன் மூலம் துறக்கிறார்.

நஞ்சம்மாளின் கணவர், சென்னிகராயருக்கோ சோறு கண்ட இடமே சொர்க்கம். தன்னுடைய ஒரு மகனும், மகளும், மனைவியும் இறந்த பிறகு எஞ்சியிருக்கும் ஒரே மகன் தன் கண்ணெதிரே ஊரை விட்டு ஒரேயடியாக நீங்குவதைப் பார்த்தும், புகையிலைச்சாறு வீணாகிவிடும் என அமைதி காக்கும் இறுதிக்காட்சி ஒன்று போதும் அவரது சுபாவத்தைப் புரிந்துகொள்ள.

ஆனால், அவரது தம்பி அப்பண்ணய்யாவுக்கு ஒரு காலகட்டம் வரை அன்னை கங்கம்மாவின் சொற்களே வேதவாக்கு. அன்னையுடன் சேர்ந்து அக்கம்பக்கத்து ஊர்களுக்கு செல்வதும், அங்கு தன் அன்னையின் பேச்சுத்திறனால் தானமாகப் பெறப்படும் தானியங்களை சுமந்து தன் கிராமத்துக்கு கொண்டு வருவதும், பின்னர் அத்தானியங்களைக் கொண்டு பசியாறுவது மட்டுமே அவனது வாழ்வாக இருந்தது. தன் மனைவியின் பொருட்டோ பிள்ளைகளின் பொருட்டோ எவ்வித பந்தபாசத்துக்கும் ஆட்படாதவன். அவனே கூட, தன் அண்ணன் மகளின் திருமணத்தில் துவங்கி, பின்னர் அண்ணனின் பிள்ளைகளின் மறைவில், அண்ணி மற்றும் விசுவனுக்கு துணையாக சிருங்கேரி செல்வதில் என கொஞ்சம் கொஞ்சமாக அண்ணன் குடும்பத்துக்கு தன்னாலான உதவிகளைச் செய்து ஆறுதலாக இருக்கிறான்.

ஊர் ஊராக சுற்றித் திரிவதும், தான் எண்ணியது மட்டுமே சரி எனும் இயல்பும் கொண்ட கண்டி ஜோதிடர் அதற்கென எவ்வித எல்லைக்கும் செல்லும் துணிவு கொண்டவர். நள்ளிரவில் மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்பட்டிருக்கும் சிலையை உதைத்து அதிலிருக்கும் பணத்தை எடுத்து வருமிடம் அவரது துணிச்சலுக்கான ஒரு உதாரணம். உண்மையில் அவர் தலைமறைவு வாழ்க்கை வாழாமல் இருந்திருந்தால் அவரது மகள் நஞ்சம்மாளின் பெரும்பாலான கவலைகள் துவக்க நிலையிலேயே மறைந்திருக்கலாம். அப்பாவைப் போன்ற சுபாவம் கொண்டிருந்தாலும் கல்லேசனின் திருமண வாழ்வின் சிக்கல்கள், தன் அண்ணனின் உதவியினை நாடுவதிலிருந்தும் நஞ்சம்மாவைத் தடுக்கின்றன.

இக்கதையில் வரும் ஜோதிடர்கள் கூறும் ஆலோசனை மற்றும் பரிகாரங்கள் அனைத்துமே அவர்களது வயிற்றுப்பாட்டை நிவர்த்தி செய்வனவாகவே அமைந்திருக்கின்றன. தான் உண்ண விரும்பியதற்காக, திதியில் படைக்கப்படும் பலகாரங்கள் அனைத்தும் நெய்யில் இருக்க செய்திருக்கவேண்டும் எனக்கூறுவதும், பரிகாரத்துக்கு தேவைப்படும் பல வகைப்பட்ட பிராமணர்களாக (திருமணமான ஒருவர், பிரம்மச்சாரி ஒருவர், ஒரு விதவை, தாரம் இழந்த ஒரு பிராமணர்) தன்னுடைய சொந்தக்காரர்களை அழைப்பதும் என பல சந்தர்ப்பங்களை உதாரணமாக சொல்லலாம்.  

தன் கணவன், மாமியார், சமூகம், காலகட்டம், நோய் என பலவித சிக்கல்களையும் எதிர்கொண்டு போராடும் நஞ்சம்மாவை மையப்படுத்தி  இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. போலவே, இக்கதையில் வரும் கங்கம்மா, கல்லேசனின் மனைவி, அப்பண்ணய்யாவின் மனைவி, கிராமத்தில் இருக்கும் நரசி என இன்னும் பல பெண்களின் தரப்பு நியாயத்தை எண்ணினால், அவையும் தன்னகத்தே பெருங்கதைகள் கொண்டிருப்பனவாகவே அமையும்.

 

ஒரு குடும்பம் சிதைகிறது

எஸ்.எல்.பைரப்பா (தமிழில்: எச்.வி.சுப்ரமணியம்)

நேஷனல் புக் டிரஸ்ட்

#வாசிப்பு_2026