title


குமாரத்தி

 அதிகாலை. 


மூடப்பட்டிருக்கும் அந்த வீட்டு கதவின் சாவித்துவாரம். கதவின் இருபுறமும் துவாரத்தில் பொருத்தப்பட்டு மறுபுறத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் விழிகள். அவற்றில் தழும்பி நிற்கும் கண்ணீர். இருபுறமும் நீர் கோர்த்த கருவிழிகள். வீட்டுக்கு உள் இருக்கும் விழிகள் இளைய மகளுடையது. வெளிப்புறமிருப்பதோ தகப்பனுடையது. இருவருக்குமே மறுபுறம் இருப்பது எவர் என்பது நன்கு தெரியும். நினைவறியா வயதில் அம் மகவை விட்டுப்போன தகப்பனும் சரி, பத்து வருடங்கள் தாண்டிய பின்னர் தன் தகப்பனை பார்த்து, இப்போது அவன் அன்புக்கு ஏங்கும் மகளும் சரி, தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் ஒரு பெரிய பிரிவுக்கு ஆயத்தமாகின்றனர். 

நான் இதுவரை வாசித்த ஆகப்பெரிய துயர்மிகு காட்சிகளுல் ஒன்று குமாரத்தி நாவலில் வரும் இத்தருணம். இதற்கிணையான பெரும் வலி மிகு தருணங்களை மிக எளிய சொற்களில் உணர்த்துவதே இந்நாவலின் பெரும் சிறப்பு.

ஒரே ஒரு நாள் தாமதத்தால் சவரியான் இழப்பது, அவனது மீதியிருக்கும் வாழ்க்கை முழுவதையுமே. ஒருவகையில், அந்நாளில் அவன் அடைந்தது அவனது முந்தைய தவறுக்கான தண்டனை எனக்கொண்டாலும் கூட, அதே சிலுவையை தேவமலரும், ஞானப்பூவும் சுமக்க நேர்வது வாழ்வின் விளங்க முடியாத புதிர்களில் ஒன்று. 

சாயலில் தேவகுமாரன் தெரிவதாலோ என்னவோ, கெம்புவிடம் இயேசுவைக் காணும் அமலி சிஸ்டர். தன் வருகையை அவளுக்கு அறிவிக்க, மழை பொய்த்துப் போய் வறண்டிருக்கும் கிணறுகளின் அடி ஆழத்தில் நெருப்பினை எரிய வைத்தல், தேவாலயத்தின் மணியை, அதன் நாவை களவு செய்து அதை பின்கட்டில் பத்திரமாக்குதல் என கெம்புராஜின் உலகமே வேறு. அனைவராலும் கைவிடப்பட்ட ஊருக்கு களவாடப் போய், அங்கிருக்கும் ஒரே ஒருவனிடம் மாட்டிக்கொள்கிறான் கெம்பு. அவ்வூரில் படையலும் பூஜையுமற்று தனித்து விடப்பட்ட கருப்பனுக்கு, அவை நிகழ கெம்புவும், அமலியும் உதவுவது என விநோதங்கள் நிறைந்தது அவன் உலகு. 

கெம்புவிடம் இயேசுவைக் கண்ட அமலியைப் போலவே, சமேத் மேரியிடம் பெருங்கருணை கொண்ட அன்னை மேரியை கெம்புவும் கண்டிருக்கக்கூடும். இரு நாய்களின் பசியைப் போக்க சலேத் உதவும் முதல் காட்சியிலேயே அவளின் பெருங்கருணையால் பீடிக்கப்படுகிறான் கெம்பு. தொடரும் நிகழ்வுகள் அனைத்துமே அவனது சலேத் மீதான அவனது பிரியத்தை மென்மேலும் வளர்க்கின்றன. 

மாமா மாமா என ஆசையாய் அழைத்துக்கொண்டிருந்த சிறுவனின் மனதுக்குள் சுற்றம் ஜாதியை விதைத்து அவனை முதலில் கொலைகாரனாக்கி பின்னர் அவனையும் கொன்றது. இது தகப்பனையும் ஆசைத்தம்பியையும் தன் கையால் ஐநூறு வெட்டுகள் வெட்டிக்கொன்ற ஜோதியின் கதை.

விடிந்தால் தூக்கு தண்டனை நிறைவேற இருக்கும் கெம்புவுக்கும், சில வாரங்களில் தூக்கில் தொங்கப்போகும் ஜோதிக்கும் ஒரு இரவு உணவு. ஒரு சிறு பொழுதுதான் பழக்கம் என்றாலும் அச்சிறு பொழுதிலேயே கெம்புவுக்கு அன்னையாகவும், காதலியாகவும் மாறுகிறாள் ஜோதி. ஒருவகையில் அமலி சிஸ்டரின் இயேசுவாகிய கெம்பினுடைய (The Last Supper) இறுதி இரவுணவு ஜோதியுடன் அமைகிறது. 

சிறை மதிலுக்கு உள்ளே, மிக வசீகரமான மின்னலைப் போன்ற சிரிப்பை, கெம்புராஜ்ஜினுடைய இறுதிச்சிரிப்பை சுமந்துகொண்டு திருப்தியடைந்த ஜோதியும், மதிலுக்கு வெளியே இயேசுவின் உடலை சுமந்து செல்லக் காத்திருக்கும் அமலி சிஸ்டர் மற்றும் சலேத் மேரியும் ஒரே மழையில் நனைவதில் நிறைகிறது குமாரத்திகளின் வாழ்க்கை.

***

உறக்கச் சடவிருந்த ஒரு இரவில், சில பக்கங்கள் மட்டும் என ஆரம்பித்து இந்நாவலை படிக்கத் துவங்கி, கடிகாரத்தின் பெண்டுலம் போல உணர்ச்சிகளில் ஊசலாடிக்கொண்டு, எழுத்துகளை மறைக்கும் கண்ணீர்த்துளிகளுடன் இந்நாவலை முடித்தது ஒரு நள்ளிரவில். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரே அமர்வில் நான் வாசித்தது இந்நாவல். மிகக்கூரிய சரியான இலக்கடைந்த சொற்கள், பெரும் எழுச்சிமிக்க தருணங்களையும் அதன் உணர்வுகளையும் மிகவும் குறைவான சொற்களில் வாசகனுக்கு கடத்தும் எழுத்து, இவற்றுக்கிணையாகவே மிகத் தரமாக நூலாக்கம் மற்றும் எழுத்துருகள் இவையே சலிப்பில்லா வாசிப்புக்கு காரணம்.

நன்றியும் பேரன்பின் தழுவல்களும் Naran நரன் சார் !!

குமாரத்தி (நாவல்) - நரன் - சால்ட் பதிப்பகம்

#வாசிப்பு_2026

#குமாரத்தி

No comments: