ஆதிரா என்றொரு தேவதை

ஆரஞ்சுடன் சேர்த்து
விதையையும் உண்ட ஆதிரா
பயத்திலேயே தூங்கிப் போனாள்

வயிற்றில் முளைத்த
விதை விருட்சமாகி
தலை வழியே வெளிவந்தது

மரமெல்லாம் ஆரஞ்சு பழங்களுடன்
ஒரு தேவதையாக வலம்
வந்த ஆதிரா…
விடிந்த பின் விழித்தெழுந்து
மரம் தேடி அழுதாள்..

ஆதிராவுக்காய் காத்திருந்தன
ஆரஞ்சு தோட்டங்கள்
கனவுலகில்….

**

தன் கனவில் வரும் பூக்கள் மீது
கொள்ளை ப்ரியம்
ஆதிராவுக்கு….

பெருங்கொண்ட சுகந்தம்
வீசும் மென்மலர்கள்…

அவளுக்கு மிகப்பிடித்த நிறங்களில்…
எப்போதும் புதிதாக வாடாமல்…
செல்ல மலர்களுக்கு
என்ன பெயர் வைப்பதென்று

குழம்பித் தவித்தாள் ஆதிரா….

”தேவதை” என பெயரிட்டிருந்தன
மலர்கள் ஆதிராவுக்கு

No comments:

Post a Comment